Thursday, August 24, 2017

காஞ்சனமழை பொழிந்த காஞ்சி காமாக்ஷி!



பொன்மழை பொழிந்த அன்னை காமாட்சி!
 
பிரபலமாகாத ஒரு கதை !
                                         நாத்திக மன்னன் ஆகாயபூபதி மகவின்றி வருந்துகையில்,கோரக்நாதரின் தீக்ஷை பெற்று,ஆத்திகனாகி தலைநகராம் காஞ்சியில் காமாட்சியை வழிபடத் தொடங்கினான் .அரச தம்பதியரின் ஆழ்ந்த பக்தியால் மகிழ்ந்த அன்னை தன் தலைமக[கரிமுக]னையே அவர்களுக்கு மகனாகப் பிறக்கவைத்து அருளினாள் .
       அருமை மகனின் நாமகரண நாளை விழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்த மன்னன் , விருந்தில் சுமங்கலிகளை காமாட்சியாகவே பாவித்து விருந்தளித்தான் .விருந்தினர் உண்கையில் அருகிருந்த முற்றத்தில் திடீரென பொல பொலவென மழை ! வெறும் மழையல்ல, பொன் மழை ! மன்னனும் மக்களும் ஆச்சர்யத்தால் வாயடைத்து நின்றனர் ; மன்னனை மேலும் வாய் பிளக்க வைத்தது, 12நாளேயான பிள்ளை மஞ்சத்திலிருந்து தவழ்ந்து அவனருகில் வந்து "அப்பா" என்றழைத்த மதுர ஒலி ! சிசு தெளிவாகப் பேசவும் ஆரம்பித்தது :
       "விருந்து சமைப்பதற்கான பண்டங்களை தரம் பார்க்கச் சென்ற தாய் ,பயற்றங் கொழுக்கட்டைக்கான பயற்றைத் தரம் பார்க்க கையால் அளைகையில் மோதிரத்துப் பொன்மணி ஒன்று கழன்று பயற்றில் விழுந்து கலந்து விட்டது ;ராணியும் கவனிக்கவில்லை ;சமையற்காரர்களும் கவனிக்காமல் கொழுக்கட்டை செய்து பரிமாறிவிட்டனர் ; பொன்மணியுள்ள கொழுக்கட்டை ,சுமங்கலியாக வந்தமர்ந்த காமாட்சி அன்னையின் இலையில் இருக்கவே,அது அவள் வயிற்றை அடைந்ததும் அன்னை நம் நாட்டு வறுமையைப் போக்க கருணை மழையைப் பொன்மணியாக்கிப்  பொழிந்துவிட்டாள் ! "
      பார்ப்பதையும்,கேட்பதையும்நம்ப முடியாமல் நின்றவர்களை,"சுமங்கலிப்பந்தியில்  போய்ப் பாருங்கள்; உண்மை தெளிவாகும்"என்று சேய் சொல்ல ,யாவரும் சுமங்கலிப் பந்தியை நோக்கினர் .அங்கிருந்த இலைகளில் ஒரு இலையின் முன் மட்டும் வெற்றிடம் ; ஆனால் இலையில் இருந்த உணவு வகைகளிலும்,கொழுக்கட்டையிலும் உண்டதற்கு அடையாளமாய் விரற்சுவடுகள் இருந்தன !
    "உலகுக்கே  உணவூட்டும் அன்னபூரணியே இன்று இங்கே உணவு உண்டாளா?"என்று
அரச தம்பதியரும்,விருந்தினரும், அன்னையின் கருணையை எண்ணி,ஆனந்தக் கண்ணீர் உகுத்தனர் .சேயோ இலையிலிருந்து உணவு மிகுதியைத் தானும் உண்டு, காமாட்சி அன்னையின் பிரசாதமாக எல்லோர்க்கும் விநியோகித்தது .
     தெய்வக்குழைந்தைக்கு தும்பிக்கையான் என்று பொருள்படும்படி துண்டீரன் என்ற பெயர் சூட்டப்பட்டதும் அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினர் .
   உரிய பருவம் வந்ததும் துண்டீரருக்கு அரச பொறுப்பை கொடுத்துவிட்டு வனம் ஏக எண்ணிய பூபதி காமாட்சி அன்னையின் திருமுன்னரே இளவரசனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தான் .அரசப்பொறுப்பை ஏற்ற துண்டீரர் பல ஆண்டுகள் செவ்வனே ஆட்சி செய்ததால் அந்நாடு துண்டீர நாடு என்றே பெயர் பெற்று விட்டது !விநாயக புராணத்தில் வரும் ,
  "அண்டரும் புகழ் துண்டீரன் ஆண்டு துண்டீரநாடாய் "
எனும் வரி துண்டீரரின் நல்லாட்சிக்குச் சான்று கூறும் ; மேலும் ஸ்துதி சதகத்தின் 74வது ஸ்லோகத்தில் "துண்டீர நாட்டில் பொன்மழை பொழியும் சண்டி என்ற பெயருள்ள காமாட்சி,நிலவைத் தலையணியாக சிரத்தில் பூணும் பரமனிடம் பேரன்பு கொண்டவளாய்த் திகழ்கிறாள்"என்ற பொருளுடைய
                          துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ணவ்ருஷ்டிப்ரதாத்ரீ
                          சண்டீ தேவீ கலயதி ரதிம் சன்த்ரசூடாலசூடே ||74||

எனும் மூகரின் வரிகளும் இக்கதைக்குச் சான்றாய் அமைந்துள்ளதைக் காணலாம் .
       உரிய காலம் வந்ததும் மற்றவர்களைப்போல் துறவு பூண்டு வனம் செல்லாமல்,உத்சவ காமாட்சி முன்னர் கை கூப்பி நின்றவண்ணம் த்யானத்தில் ஆழ்ந்தார் துண்டீரர் !இன்றும் உத்சவ காமாட்சியின் எதிரில் உள்ள துண்டீர மஹாராஜாவின் அருகில் ப்ரதக்ஷிணம் செய்கையில் வாய் மூடி கை கூப்பியபடி
அவரது த்யானத்தைக் கலைக்காமல் செல்லவேண்டும் என்ற விதி அனுசரிக்கப்படுவதைக் காணலாம் !
      இக்கதையின் அடிப்படையில் கீழுள்ள லிங்கில் நான் எழுதிய பாட்டின் முதல் நான்கு வரிகள் 
http://ammanpaattu.blogspot.in/2015/01/blog-post_30.html 


மோதகப் பொன்மணியுண்டதும்  காஞ்சியில்
ஆடகம் பொழிந்த  காமாக்ஷி !
பாதமலர்தனில்  இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!


அன்பர்களுக்கு பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் !



பிள்ளையாரின் ஷோடச நாம மஹிமையை கலாவின் இனிய குரலில் கேட்டு ரசிக்க 
http://myprayers-lalitha.blogspot.in/2011/08/blog-post_31.html


நன்றி : அமரர் ரா.கணபதி அவர்களின் "காமாக்ஷி !கடாக்ஷி ! "


2 comments:

  1. துண்டீரரையும், அன்னையையும் வணங்குகிறேன்.

    ReplyDelete
  2. புதியதொரு கதை இதுவரை கேட்டதே இல்லை கவிநயாம்மா! அருமையான கதை!

    துளசிதரன், கீதா

    ReplyDelete