Saturday, June 23, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 6 [91-120]

"மாரியம்மன் தாலாட்டு" -- 6 [91-120]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்




"மாரியம்மன் தாலாட்டு"

[வரிகள் 91-120]





எக்கால தேவியரே திக்கெல்லாம் ஆண்டசக்தி

காசிவள நாட்டைவிட்டு கட்டழகி வாருமம்மா

ஊசி வளநாடு உத்தியா குமரிதேசம்

அறியாதான் பாடுகிறேன் அம்மைத் திருக்கதையை

தெரியாதான் பாடுகிறேன் தேவி திருக்கதையை

எட்டென்றா லிரண்டறியேன் ஏழையம்மா வுன்னடிமை

பத்தென்றா லொன்றறியேன் பாலனம்மா உன்னடிமை

பாடவகை யறியேன் பாட்டின் பயனறியேன்

வருத்த வகையறியேன் வர்ணிக்கப் பேரறியேன்

பேரு மறியேனம்மா பெற்றவளே யென்தாயே [100]


குழந்தை வருந்துறதுன் கோவிலுக்குக் கேட்கிலையோ

மைந்தன் வருந்துறதுன் மாளிகைக்குக் கேட்கிலையோ

பாலன் வருந்துறதும் பார்வதியே கேட்கிலையோ

கோயிற் கடிமையம்மா கொண்டாடும் பாலகண்டி

சந்நிதி மைந்தனம்மா சங்கரியே பெற்றவளே

வருந்தி யழைக்கின்றேன்நான் வண்ணமுகங் காணாமல்

தேடி யழைக்கின்றேன்நான் தேவிமுகங் காணாமல்

ஏழைக் குழந்தையம்மா எடுத்தோர்க்குப் பாலகண்டி

பாலன் குழந்தையம்மா பார்த்தோர்க்குப் பாலகண்டி

மைந்தன் குழந்தையம்மா மகராசி காருமம்மா [110]


கல்லோடீ உன்மனது கரையிலையோ எள்ளளவும்

இரும்போடீ உன்மனது இரங்கலையோ எள்ளளவும்

கல்லுங் கரைந்திடுமுன் மனங்கரையா தென்னவிதம்

இரும்பு முருகிடுமுன் இருதயமுருகா தென்னவிதம்

முன்செய்த தீவினையோ பெற்றவளே சொல்லுமம்மா

ஏதுமறி யேனம்மா ஈஸ்வரியே சொல்லுமம்மா

கடம்பாடி யெல்லையிலே கட்டழகி வீற்றிருப்பாய்

கடும்பாடி யெல்லைவிட்டு கட்டழகி வாருமம்மா

கரகத் தழகியரே கட்டழகி மாரிமுத்தே

கரகத்து மீதிருந்து கட்டழகி கொஞ்சுமம்மா [120]





[இன்னும் வரும்]

No comments:

Post a Comment