Monday, June 17, 2013

அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை



லிங்காஷ்டகம் மெட்டில் எழுதினேன். சுப்பு தாத்தா முஹாரியில் அருமையாகப் பாடியிருக்கிறார். மிக்க நன்றி தாத்தா!




அயன் அரி தேவரும் வணங்கிடும் அன்னை
அரனுடன் இடப்புறம் இருந்திடும் அன்னை
அன்பர்கள் இதயத்தில் உறைந்திடும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஆனை முகத்தனை ஆக்கிய அன்னை
ஆறிரு தோளுடைக் குமரனின் அன்னை
ஆனந்தம் தந்திடும் அழகுடை அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

இமயவன் மகளவள் உமையவள் அன்னை
இமையென அடியரைக் காத்திடும் அன்னை
இம்மையில் மறுமையில் துணை வரும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஈசனின் துணையவள் மனையவள் அன்னை
ஈடெதும் இல்லா இனியவள் அன்னை
ஈரம் மிகுந்தவள் நம்முடை அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

உலகெனும் நாடகம் நடத்திடும் அன்னை
உள்ளத்தில் உவகையை நிறைத்திடும் அன்னை
உயிர்களை உயிரெனக் காத்திடும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஊழ்வினை யாவையும் ஓட்டிடும் அன்னை
ஊற்றென அருளினைப் பொழிந்திடும் அன்னை
ஊழியில் நடமிடும் சிவன் சதி அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

எண்ணிலும் எழுத்திலும் இருந்திடும் அன்னை
என்னிலும் உன்னிலும் உறைந்திடும் அன்னை
எண்ணியதும் உடன் அருளிடும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஏழுலகோருமே போற்றிடும் அன்னை
ஏற்றிடும் அடியவர் இதயத்தில் அன்னை
ஏங்கிடும் பேருக்கு ஆறுதல் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஐந்தொழில் யாவையும் புரிந்திடும் அன்னை
ஐந்திர தேவரும் போற்றிடும் அன்னை
ஐயனின் மடியினில் விளங்கிடும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஒன்றென பலவென விரிந்திடும் அன்னை
ஒன்றென இரண்டினை ஆக்கிய அன்னை
ஒன்றிய மனதினில் நின்றிடும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஓதிடும் பொருளினில் உறைந்திடும் அன்னை
ஓடிடும் மனதினை நிறுத்திடும் அன்னை
ஓவிய எழில்மிகு ஒப்பிலா அன்னை
அன்புடன் நான் தினம் பணிந்திடும் அன்னை

ஔடத மென நமக் குதவிடும் அன்னை
ஔவியம் தீர்த்து அருளிடும் அன்னை
ஔதா ரியம்மிக நிறைந்தவள் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை


 அருஞ்சொற்பொருள்:

*ஔடதம் – மருந்து
*ஔவியம் – அழுக்காறு
*ஔதாரியம் – பெருந்தன்மை

--கவிநயா

8 comments:

  1. பொருள் விளக்கத்துடன் பாடல் அருமை... வாழ்த்துக்கள்... விரைவில் சுப்புத் தாத்தா தளத்தில் கேட்க வேண்டும்... நன்றி...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்! சுப்பு தாத்தா பாடியதை இணைச்சிருக்கேன், கேளுங்க! :)

    ReplyDelete
  3. அழகாக அ- வில் தொடங்கி ஔ - வில் ஒரு எழுத்தும் miss ஆகாமல் முடித்து இருகிறிங்க. பாரதியார் மீண்டும் பிறந்து வந்து எழுதியது போல் உள்ளது . SPB யின் லிங்காஷ்டகம் அழகாக
    பொருந்தி உள்ளது . ரெம்ம்ப ரெம்ப நன்றி அக்கா என்னோடை அம்மாவை இவ்வளவு அழகாக பாடியதற்கு. நீங்க லாஸ்ட் ஆக எழுதிய
    "அறிவு கெட்ட மனமே" பாடல் - மனதுக்கு மட்டும் எழுதி இருந்திங்க - அப்படியே ஐம்புலனுக்கும் எழுத முடியுமா ?

    ReplyDelete
  4. அன்பினிய ஷைலன், உங்க மகிழ்ச்சி பார்த்து எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி :) ஐம்புலனுக்கும் 'திரு அங்க மாலை'ன்னு ரொம்ப நாள் முன்னாடி எழுதினேன்.. நீங்க அது படிச்சிருக்கீங்களான்னு தெரியலை:

    திரு அங்க மாலை - 1
    திரு அங்க மாலை - 2

    ReplyDelete
  5. ஐம்புலனுக்குன்னு சொல்ல முடியாது, தப்பா சொல்லிட்டேன். உடலில் உள்ள ஒவ்வொரு அங்கத்துக்கும்...

    ReplyDelete
  6. ஆமா நீங்க முன்னாடியே எழுதியிருகிரிங்கள். நா தான் மறந்திட்டேன். நன்றி!

    ReplyDelete
  7. அருமை

    வாழ்த்துகள்

    ReplyDelete
  8. நன்றி ஷைலன் :)

    நன்றி திகழ் :)

    ReplyDelete