Friday, June 22, 2007

மாரியம்மன் தாலாட்டு" -- 5 [61-90]

மாரியம்மன் தாலாட்டு" -- 5 [61-90]


ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"

[வரிகள் 61 - 90 ]

எக்காள தேவியரே திக்கெல்லாம் ஆண்டவளே

திக்கெல்லாம் ஆண்டவளே திகம்பரியே வாருமம்மா

முக்கோணச் சக்கரத்தில் முதன்மையாய் நின்றசக்தி

அக்கோணந் தன்னில்வந்து ஆச்சியரே வந்தமரும்

தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா

மாயி மருளியரே மணிமந்திர சேகரியே

வல்லாண்மைக் காரியரே வழக்காடும் மாரிமுத்தே

வல்லவரைக் கொன்றாய் வலியவரை மார்பிளந்தாய்

நீலி கபாலியம்மா நிறைந்த திருச்சூலியரே

நாலுமூலை ஓமகுண்டம் நடுவே கனகசபை [70]


கனகசபை வீற்றிருக்கும் காரண சவுந்தரியே

நாரணனார் தங்கையரே நல்லமுத்து மாரியரே

நடலைச் சுடலையம்மா நடுச்சுடலை தில்லைவனம்

தில்லைவனத் தெல்லைவிட்டு திரும்புமம்மா யிந்தமுகம்

வார்ப்புச் சிலையாளே வச்சிரமணித் தேராளே

தூண்டில் துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்

மண்டையிலே தைத்தமுள்ளு மார்புருகிப் போகுதம்மா

பக்கத்திற் தைத்தமுள்ளு பதைத்துத் துடிக்குதம்மா

தொண்டையிலே தைத்தமுள்ளு தோளுருவிப் போகுதம்மா

கத்திபோல் வேப்பிலையைக் கதறவிட்டாய் லோகமெல்லாம் [80]


ஈட்டிபோல் வேப்பிலையை யினியனுப்பிக் கொண்டவளே

பத்திரிக் குள்ளிருக்கும் பாவனையை யாரறிவார்

வேப்பிலைக் குள்ளிருக்கும் வித்தைகளை யாரறிவார்

செடிலோ துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்

தூண்டிமுள்ளைத் தூக்கி துடுக்கடக்கும் மாரிமுத்தே

ஒற்றைச் செடிலாட ஊரனைத்தும் பொங்கலிட

ரெட்டைச் செடிலாட படைமன்னர் கொக்கரிக்க

பரமசிவன் வாசலிலே பாற்பசுவைக் காவுகொண்டாய்

ஏமனிட வசலிலே எருமைக்கிடா காவுகொண்டாய்

எருமைக்கிடா காவுகொண்டாய் எக்கால தேவியரே [90]



[இன்னும் வரும்]

2 comments:

  1. இதுவரை படித்தது இல்லை. அழகான எளிமையான மொழியில் எழுதிய பாட்டு. இங்கே தந்தற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. //மண்டையிலே தைத்தமுள்ளு மார்புருகிப் போகுதம்மா

    பக்கத்திற் தைத்தமுள்ளு பதைத்துத் துடிக்குதம்மா

    தொண்டையிலே தைத்தமுள்ளு தோளுருவிப் போகுதம்மா//

    எத்தனை எளிமை!
    எனினும் அத்தனை ஆழமான வரிகள்!
    தொடர்ந்து இங்கே தருவதற்கு நன்றி SK!

    இதை விக்கிமூலத்தில் (wikisource) -இல் சேர்த்து விட்டீர்களா SK?
    இல்லை அடியேன் சேர்க்கட்டுமா? உதவி வேண்டில் சொல்லுங்கள்...நிச்சயம் இந்நூல் அங்கு இருக்க வேண்டிய ஒன்று!

    ReplyDelete