Monday, June 25, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 8 [151-180]

"மாரியம்மன் தாலாட்டு" -- 8 [151-180]




ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்



"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள் 151- 180]




0ஆதிபர மேஸ்வரியே அருகேதுணை நீயிரம்மா

உன்னைப்போல் தெய்வத்தை உலகத்தில் கண்டதில்லை

என்னைப்போல் மைந்தர் எங்குமுண்டு வையகத்தில்

உன்-மகிமை யறிந்தவர்கள் மண்டலத்தில் யாருமில்லை

உன் -சேதி யறிவாரோ தேசத்து மானிடர்கள்

உன் -மகிமையை யானறிந்து மண்டலத்தில் பாடவந்தேன்

உன் -மகிமையறி யாதுலகில் மாண்டமனு கோடியுண்டு

உன் -சேதியறி யாதுலகில் செத்தமனு கோடியுண்டு

தப்புப்பிழை வந்தாலும் சங்கரியே நீபொறுத்து

ஆறுதப்பு நூறுபிழை அடியார்கள் செய்ததெல்லாம் [160]


மனது பொறுத்து மனமகிழ்ச்சி யாகவேணும்

தேவி மனம்பொறுத்து தீர்க்கமுடன் ரட்சியம்மா

கொண்டு மனம்பொறுத்து கொம்பனையே காருமம்மா

கார்க்கக் கடனுனக்குக் காரண சவுந்தரியே

காரடி பெற்றவளே காலுதலை நோகாமல்

வேணுமென்று காரடிநீ வேப்பஞ் சிலையாளே

பக்கத் துணையிருந்து பாலகனைக் காருமம்மா

பொரிபோ லெழும்பிநீ பூரித்து ஆலித்து

ஆலித்து நீயெழும்பி ஆத்தா ளிறக்குமம்மா

சிரசினிற் முத்தையம்மா முன்னுதாய் நீயிறக்கும் [170]


கழுத்தினில் முத்தையம்மா கட்டழகி நீயிறக்கும்

தோளினில் முத்தையம்மா துரந்தரியே நீயிறக்கும்

மார்பினில் முத்தையம்மா மாதாவே நீயிறக்கும்

வயிற்றினில் முத்தையம்மா வடிவழகி நீயிறக்கும்

துடையினில் முத்தையம்மா தேவியரே நீயிறக்கும்

முழங்காலில் முத்தையம்மா மீனாட்சி நீயிறக்கும்

கணுக்காலில் முத்தையம்மா காமாட்சி நீயிறக்கும்

பாதத்தில் முத்தையம்மா பாரினி லிறக்கிவிடும்

பூமியில் இறக்கிவிடும் பெற்றவளே காருமம்மா

பெற்றவளே தாயே பேரரசி மாரிமுத்தே [180]

[தாலாட்டு வரும்]

1 comment:

  1. அம்மை போடும் போது பாடும் பாட்டு தானே SK?

    //ஆறுதப்பு நூறுபிழை அடியார்கள் செய்ததெல்லாம்
    மனது பொறுத்து மனமகிழ்ச்சி யாகவேணும்//

    அப்படியே பாட்டாலே குளிர்விக்கிறார்!

    ReplyDelete