Friday, September 18, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" - 1&2

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 1&2

நவராத்ரியில் பொதுவாக நாமனைவரும் துர்கா, லக்ஷ்மி ஸரஸ்வதி எனும் முப்பெரும் தேவியரை வணங்குதல் மரபு. இவர்கள் மூவரும் முறையே சிவன், திருமால், பிரம்மா எனும் முக்கடவுளரின் சக்தியாக விளங்குவர். அருள்மிகக் கொண்ட லோகமாதா, தன் கருணையினால் இந்த தேவியரின் உள்ளிருந்து இயக்க இன்னும் மூன்று சக்திகள் பிறந்தன. இவையே நவராத்ரி நாயகியர் எனத் துதிக்கப்படும் சக்தியின் ஒன்பது அம்சங்கள். ஸ்ரீ மஹா துர்க்கையின் ஒன்பது அம்சங்களான இந்த நவராத்ரி நாயகியரின் குணச்சிறப்புகளைப் போற்றித் துதிக்கும் விதமாக இந்த 'நவநாயகியர் நற்றமிழ்மாலை' என்னும் துதிப்பாடலை இங்கு அளிக்கிறேன். மங்களமான இந்த நவராத்திரி நன்நாளில் இதனைதினந்தோறும் படித்து அவளருள் பெற அனைவரையும் வேண்டுகிறேன்.

எதை எழுதுவது எனத் திகைத்திருந்த வேளையில் தனது இந்த அம்சங்களை எனக்குக் காட்டியருளிய என் தாயின் கருணையைப் போற்றி, அவள் திருக்கமலங்களில் இதனைச் சமர்ப்பிக்கின்றேன். இவற்றுள் ஒரு அம்சம் ஸ்கந்த மாதா என்பது என் மனதுக்கு இனிமையாயிருந்தது!
ஒருநாள்விட்டு ஒருநாளாய் இந்தப் பதிவுகள் வரும். அந்தந்த நாட்களுக்கு உரிய தேவியைத் துதித்து அருள்பெற அழைக்கிறேன்! முருகனருள் முன்னிற்க, யாவினும் நலம் சூழ்க!


"நவநாயகியர் நற்றமிழ்மாலை"

'காப்பு'
மங்களஞ்சேர் நவநாயகி மன்னுபுகழ் பாடிடவே
பொங்குதமிழ்ச்சொல்லெடுத்துப் புகழ்மாலை சூட்டிடவே
தங்குதடை ஏதுமின்றிப் புகழ்பரதம் எழுதிட்ட
ஐங்கரனே நின்னடியே காப்பு.

1. ஷைலபுத்ரி தேவி:

சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே
புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே
மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே
வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும் துர்க்கையளே!
ஹிமவான் மகளாய் மலையினில் பிறந்து ஷைலபுத்ரியென அருள்பவளே
சிவனை அடைந்திடக் கடுந்தவம்செய்து சிவமும் அசைந்திடச் செய்தவளே
மூலாதாரத்தில் உன்னிடும் பக்தரை மேலேகொண்டு செல்பவளே
நவநாயகியரில் முதல்நாளின்று மஹாஷைலபுத்ரி தாள் பணிந்தேன்! [1]

2. ப்ரஹ்மசாரிணி மாதா:பிரமனின்மகனாம் தக்ஷனின்மகளாய்ச் சிவனை மணம்செய்து கொண்டவளே
சிவனைமதியாச் சிறுமதியோனைச் சீற்றம்பொங்கிடப் பார்த்தவளே
சொல்மதிகேளா தக்ஷனைச் சபித்துத் தீயினில் மறைந்த தூயவளே
ஹிமவான் மகளாய் மலைமடி தவழ்ந்த பேரெழில்கொண்ட துர்க்கையளே!
பிரஹ்மசாரிணியாய்க் கடுந்தவம்புரிந்து சிவனை அசைத்திட்ட தாயவளே
ஸ்வாதிஷ்ட்டானத்தில் இருந்திடும் அடியவர் வேண்டியநல்கும் மாயவளே
தைரியம்,வீரம் அறிவினில்தெளிவு அனைத்துக்கும் நீயே காரணியே
நவநாயகியரில் இரண்டாம்நாளின்று ப்ரஹ்மச்சாரிணியின் தாள் பணிந்தேன்! [2]

********************
[நவநாயகியர் உலா தொடரும்]

19 comments:

  1. வெகு பொருத்தம் அண்ணா. அளிப்பதற்கு மிக்க நன்றி.

    //இந்த அம்சங்களை எனக்குக் காட்டியருளிய என் தாயின் கருணையைப் போற்றி,//

    அன்னையின் திருப்பதங்கள் சரணம்.

    ReplyDelete
  2. நேற்றுத்தான் இந்தப் படங்களும், விவரங்களும் கிடத்தன. எனக்கும் ஒரு வாய்ப்பளித்த அன்னையின் அருளே இது!

    ReplyDelete
  3. தாங்கள் பதிவில் இட்டிருக்கும் இரு தேவியர்களின் படமும் அருமையாக உள்ளது.
    அவர்களைப் பற்றிய செய்தி என்னைப்போன்ற எளியவனுக்குப் புதியது.
    ஒரு வேண்டுகோள்: அந்தத் தேவியர் கொலுவீற்றிருக்கும் ஸ்தலங்கலைப் பற்றி இரண்டு அல்லது 3 வரிச் செய்திகள் கொடுத்தீர்கள் என்றால் இன்னும் மேன்மையாக இருக்கும் சார்

    ReplyDelete
  4. அருட்கடலே! அழியாத கன்னிகையே !
    கன்னியா குமரி தாயே !
    இமவான் பெற்ற கோமளமே !
    நின் புகழ் வாழிய வாழியவே !

    ReplyDelete
  5. நவநாயகியர் பாமாலை நவம் நவமா இருக்கு SK ஐயா!
    பாடலோடு ஒவ்வொரு நாயகியர் பற்றியும் ஒரு சிறு குறிப்பு தாருங்களேன்!

    ReplyDelete
  6. //தாங்கள் பதிவில் இட்டிருக்கும் இரு தேவியர்களின் படமும் அருமையாக உள்ளது.
    அவர்களைப் பற்றிய செய்தி என்னைப்போன்ற எளியவனுக்குப் புதியது.
    ஒரு வேண்டுகோள்: அந்தத் தேவியர் கொலுவீற்றிருக்கும் ஸ்தலங்கலைப் பற்றி இரண்டு அல்லது 3 வரிச் செய்திகள் கொடுத்தீர்கள் என்றால் இன்னும் மேன்மையாக இருக்கும் சார்//

    இவர்களெல்லாம் தேவி துர்க்கையின் ஒன்பது அம்சங்கள் ஆசானே.
    இவர்களது கோயில் பல ஊர்களில் இருக்கின்றன. ஆனால், எந்த ஒரு ஸ்தலத்துடனும் இவர்களுக்கான தனிக்கோயில் இருப்பதாக அறிந்திலேன்.... காசியைத் தவிர!

    அங்கு நவதுர்கா கோயில் என ஒன்று இருக்கிறது. அங்கே இவர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. இதைத் தவிர, கோவா அருகில் ஒரு புராதன நவதுர்கா கோவில் இருக்கிறது. [பத்தாம் நூற்றாண்டு முதல்] ஆனால், அங்கே ஒன்பது வடிவங்கள் இல்லை. நவதுர்க்கையம்மன் என ஒரே உரு தான்.

    மேல் விவரம் அறிந்தால் தருகிறேன்.
    நன்றி ஆசானே!

    ReplyDelete
  7. //அருட்கடலே! அழியாத கன்னிகையே !
    கன்னியா குமரி தாயே !
    இமவான் பெற்ற கோமளமே !
    நின் புகழ் வாழிய வாழியவே !//

    நன்றி! நன்றி!
    அன்னையின் அருள்வாழ்த்து அருமை!

    ReplyDelete
  8. //நவநாயகியர் பாமாலை நவம் நவமா இருக்கு SK ஐயா!
    பாடலோடு ஒவ்வொரு நாயகியர் பற்றியும் ஒரு சிறு குறிப்பு தாருங்களேன்!//

    அப்படித்தான் பாடல்களை அமைத்திருக்கிறேன் ரவி.
    ஒவ்வொரு அன்னையின் பின்னணியில் இருக்கும் கதை, அவளது தோற்றம் இவற்றைப் பாடல்களில் வைத்திருக்கிறேன்.
    வேறு என்ன குறிப்பு வேண்டுமெனக் கேட்டால் வசதியாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  9. நவநாயகியரைப் பற்றிய துதிப்பாடல்களைப் படித்துப் பயன்பெற காத்திருக்கிறேன் எஸ்.கே. ஐயா.

    ReplyDelete
  10. நன்றி குமரன்! உங்கள் வரவுக்கே காத்திருந்தேன்!

    ReplyDelete
  11. உங்கள் பதிவு அருமை

    ReplyDelete
  12. அது ஒன்னுமில்லை SK ஐயா! பாடலை வரி வரியாகப் படிக்கும் போது தான், சைலபுத்ரி என்பது மலை-மகள், இமவான் புதல்வி என்று விளங்குகிறது!

    அதான் பாடலோடு கூடவே, பெயருக்குப் பக்கத்தில் அடைப்புக்குறிகளால் ஷைலபுத்ரி தேவி (மலையரசன் மகளான அம்பிகையை இது குறிக்கிறது. பார்வதி, பர்வதகுமாரி) என்று சொன்னால் இன்னும் பல பேருக்கு எளிமையாகப் புரியும் என்பதால் அப்படிக் கேட்டேன்!

    ReplyDelete
  13. இன்றுதான் வரமுடிந்தது. அருமை சார்.

    ReplyDelete
  14. //அது ஒன்னுமில்லை SK ஐயா! பாடலை வரி வரியாகப் படிக்கும் போது தான், சைலபுத்ரி என்பது மலை-மகள், இமவான் புதல்வி என்று விளங்குகிறது!

    அதான் பாடலோடு கூடவே, பெயருக்குப் பக்கத்தில் அடைப்புக்குறிகளால் ஷைலபுத்ரி தேவி (மலையரசன் மகளான அம்பிகையை இது குறிக்கிறது. பார்வதி, பர்வதகுமாரி) என்று சொன்னால் இன்னும் பல பேருக்கு எளிமையாகப் புரியும் என்பதால் அப்படிக் கேட்டேன்!//

    எட்டு வரிப் பாடலாக இதை அமைக்க வேண்டுமென முன் முடிவு! முதல் நான்கு வரிகளில் ஒரு சிறு கதையையும், அடுத்த நான்கு வரிகளில் அன்னையைப் பற்றிய வர்ணனையும் இருக்க வேண்டுமென நினைத்தேன்.
    நான்காம் அடியில் துர்க்கையின் பெயரும், கடைசி அடியில் அந்த அன்னையின் அம்சப் பெயரும் வரவேண்டும் எனவும்!

    இது போன்ற முன் முடிவுகளால், ரொம்பவும் விவரித்துச் சொல்ல முடியவில்லை... [நீ.மு. முடியவில்லை!:))

    கருத்துக்கு நன்றி ரவி!

    ReplyDelete
  15. //இன்றுதான் வரமுடிந்தது. அருமை சார்.//

    நீங்கள் வருகை தந்ததே எனக்குப் பெருமை மதுரையம்பதி சார்!

    ReplyDelete
  16. thank you Sankar. Because of you I am able to have the dharshan of the powerful goddess in various forms on the Navarathri day. Best wishes to all.
    Balakka

    ReplyDelete
  17. thank you Sankar. Because of you I am able to have the dharshan of the powerful goddess in various forms on the Navarathri day. Best wishes to all.
    Balakka

    ReplyDelete
  18. It is so nice of you to have come and commented akka!
    Happy navarathri namaskarams and wishes!

    ReplyDelete
  19. அடியேன் மிகவும் தாமதமாக வந்துள்ளேன் VSK ஐயா அன்னையின் அருளைப் பெற


    //இந்த அம்சங்களை எனக்குக் காட்டியருளிய என் தாயின் கருணையைப் போற்றி,//

    அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் தங்களுக்கும் அனைத்து வளங்களையும் வழங்க நவ துர்க்கையரை வேண்டுகிறேன்.

    மிக்க நன்றி VSK ஐயா.

    ReplyDelete