Friday, July 20, 2007

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்


வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள் (வெள்ளை)

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் (வெள்ளை)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள் (வெள்ளை)


இயற்றியவர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடியவர்: நித்யச்ரி
இராகம்: பிம்ப்ளாஸ்
பாடலைக் கேட்க

இந்தப் பாடலில் மேலும் சில செய்யுள்கள் பாரதியார் பாடியுள்ளார். அவற்றுடன் முழுப் பாடலுக்கும் பொருள் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவில் விரைவில் எழுதுகிறேன்.

11 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

"கலை"வாணி என்பதற்கு, கலை அனைத்தையும் பாடலில் நிறைத்து விட்டார் பாரதி!

வீணை, கவிதை, வேதம், வாசகம், பாட்டு, மழலை, தோதகன்ற தொழில், சித்திரம், கோபுரம்.....

சரஸ்வதி பூசையில் பாடக்கூடிய நல்ல கலைமகள் துதி இது, குமரன்!

VSK said...

மதுரை மணி அய்யர் பாடுகையில் குழையாத உள்ளமும் குழையும், இப்பாடலைக் கேட்கையில்!

யாதுமாகி நின்ற காளி இவளே!

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். கலைவாணியை எல்லாக் கலைகளிலும் காணலாம் என்பது தான் பாரதியின் துணிபு.

குமரன் (Kumaran) said...

மதுரை மணி ஐயர் பாடி நான் இந்தப் பாடலைக் கேட்டதில்லை எஸ்.கே. இணையத்தில் கிடைக்கிறதா பார்க்கிறேன்.

அன்புத்தோழி said...

//வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்//

சரஸ்வதி தாயாரைப் பற்றி இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது. இப்பாடலை இங்கு அளித்த திரு குமரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

சரஸ்வதி தாயார். ஆகா. சொல்வதற்கே மிக நன்றாக இருக்கிறது அன்புத்தோழி. இந்த அருமையான சொற்றொடரைத் தந்ததற்கு மிக்க நன்றி.

G.Ragavan said...

அருமையான பாடல்...எளிய கவிதை. அரிய பொருள். பாரதியின் கலைமகள் வணக்கத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி குமரன்.

இலவசக்கொத்தனார் said...

குமரன், ரொம்ப அருமையான பாடல் இது. மணி ஐயர் பாடி இருக்கும் என் கிட்ட. தேடி பார்த்து தரேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராகவன். எளிமையாக எல்லோரும் இனிதாகப் பாடும் படி இருக்கும் இந்தப் பாடலில் அரிய கருத்துகள் மலிந்து கிடக்கின்றன. இடுகையை இடும் போது பொருளும் எழுத கை துறுதுறுத்தது. பாரதி பதிவில் எழுதிவிடலாம் என்று நிறுத்திவிட்டேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி கொத்ஸ். காத்திருக்கிறேன்.

Balu said...

How can one live in white lotus? If we throw away lotus what happened to her? I think it has deeper meaning.

Any one know this?