Thursday, October 2, 2008

"தேவி திருக்கதை" -- 2

"தேவி திருக்கதை" -- 2


"கதை பிறந்த கதை!"


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


முதலாக இக்கதையை மார்க்கண்டேய மாமுனிவர்

இதைக் கேட்க ஆவலுடன் மரக்கிளையில் வந்திருந்து


பறவையென வீற்றிருந்த ஜைமினி முனிவருக்கும்

அவர்தம் சீடருக்கும் அன்புடனே சொல்லிவைத்தார்


சுரதனென்னும் ஓரரசன் தான் சுற்றம் செய்த துரோகத்தால்

நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு காட்டை அடைந்தான்


வழியிலொரு வாணிகனைக் கண்டு செல்வதெங்கே எனக்கேட்டான்

தன் மனைவி மக்களாலே தானுமிங்கே துரத்தப்பட்ட


தன்சோகக் கதையொன்றை சமாதியெனும் அவ்வணிகன்

சொன்னதனைக் கேட்ட மன்னன் ஆதரவாய் அவன் தோளில்


கைபோட்டு நடந்தபடி அடுத்தொன்று சொல்லலானான்

'இத்தனையும் எம்மக்கள் எமக்கிங்கு செய்திடினும்


இன்னுமிங்கு என் மனமும் அவர்நலனே நாடிடுதே!

ஏனென்று தெரியவில்லை! எப்படியெனப் புரியவில்லை'


அதுகேட்ட வணிகனுமே 'எனக்குமிங்கு அந்நிலையே!

எதுவென்று ஆராய என்னாலும் முடியவில்லை' என்றான்


அப்போது காட்டினிடை தவமிருந்த சுமேதசர் என்கின்ற

முனிவரைக் கண்டவுடன் 'இவரிடமே கேட்டிடுவோம்!'


எனவிருவரும் முடிவுசெய்து அவரடியைப் பணிந்தனராம்

'ஐயமொன்று ஐயனே! தீர்த்துவைக்கணும் மெய்யனே!'


என்றபடி அடிபணிந்த இருவரையும் அமரவைத்து

'கேளப்பா! இதுவெல்லாம் 'விஷ்ணுமாயை' என்னுமொரு


இறையவளின் லீலையப்பா! நடப்பதெல்லாம் மாயையென

நீயுணர வேண்டித்தான் அன்னையவள் செய்கின்றாள்!


அவளாடும் நாடகத்தை நானுரைக்கக் கேட்டிடுவாய்!

மூன்றுவகை அரக்கரையே மாயையிவள் அழித்திட்டாள்!


'ஒவ்வொன்றாய்ச் சொல்லிடுவேன்! ஒருமையுடன் கேட்டிடுக!'

எனச்சொல்லி விரிவாக திருக்கதையைத் தொடங்கலானார்!


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்! .
**********************************************
[தொடரும்]

அடுத்த பதிவு

4 comments:

  1. //////தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
    செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!////

    அதுவும் உங்கள் மொழியில் கேட்பது எல்லாவற்றையும்விட இன்பம்!

    ReplyDelete
  2. எங்கு சென்றாலும் வந்து பார்க்கும் உங்கள் அன்புள்ளத்துக்கு நன்றி ஆசானே!

    ReplyDelete
  3. நவராத்திரி சமயத்தில் அம்பாளின் தேவி மஹாத்மியம் படிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்பதற்காக அவளின் அருமை சரிதத்தை அழகு தமிழில் எளிமையாக தரும் VSK, தங்களுக்கு அன்னை அனைத்து நலங்களும் அருள பிரார்த்திகின்றேன்.

    ReplyDelete
  4. //நவராத்திரி சமயத்தில் அம்பாளின் தேவி மஹாத்மியம் படிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்பதற்காக அவளின் அருமை சரிதத்தை அழகு தமிழில் எளிமையாக தரும் VSK, தங்களுக்கு அன்னை அனைத்து நலங்களும் அருள பிரார்த்திகின்றேன்.//

    அவள் அருளாலே அவள் தாள் வணங்கி இது நிகழ்கிறது ஐயா!

    தங்கள் வாழ்த்து என்னை வளப்படுத்தும்!
    நன்றி!

    ReplyDelete