Sunday, April 8, 2007

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்"-- 8

"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" -- 8

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ

பேய்பிள்ளையானாலும் தான் பெற்றபிள்ளையைப்
பிரியமாய் வளர்க்கவில்லையோ

கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாடும் கதறி
நான் அழுத குரலில்

கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும்
காதினில் நுழைந்ததில்லையோ

இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா
இனி விடுவதில்லை சும்மா

இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும்
இது தருமம் இல்லையம்மா

எல்லோரும் உன்னையே சொல்லி ஏசுவார்
இது நீதி அல்லவம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [8]

[என்ன சொல்லியும் அன்னை வருவதாயில்லை. இவருக்கோ துக்கமும், ஆத்திரமும் பொத்துக் கொண்டு வருகிறது.
"என்ன தாய் நீ? என் புலம்பலின் ஒரு சிறு சத்தம் கூடவா உனக்குக் கேட்கவில்லை?இப்போதும் நீ வரவில்லையெனில் இருவரும் தெருவில் புரண்டு சண்டை போடுவதைத் தவிர, வேறு வழியில்லை! அப்போதும் உன்னைத் தான் பழி சொல்லுவார்கள்!"
என வாதிடுகிறார்!]


"ஜெய ஜெய காமாக்ஷி!"

9 comments:

  1. //கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாடும்
    கதறி நான் அழுத குரலில்//

    அப்படிப் போடுங்க!

    //இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும்//

    சொல்வபர் சொன்னால்
    அதுவும் சொல்லும் விதத்தில் சொன்னால்,
    கரைந்து தானே ஆக வேண்டும்! அருமையா இருக்கு SK!

    நம் மனத்தில் உதிக்காவிட்டாலும், இந்தப் பாட்டை வாயாரச் சொல்லும் போதாவது, அவளும் கரைந்து தான் ஆக வேண்டும்!

    ReplyDelete
  2. எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் இதுதான், திரு.ரவி!

    இதில் ஒரு சுவையான கதை உள்ளடங்கியிருக்கிறது.

    முதலில், இதை மனனம் செய்த போது, "இல்லாதவன் மங்கள் என் மீது ஏனம்மா?" எனத்தான் பாடி வந்தேன்.

    என் உறவுமுறைப் பாட்டி ஒருவர், இதைக் கேட்டுக் கொண்டே இருந்தவர், ஒன்றுமே சொல்லாமல், குளித்துவிட்டு தன் புடவையை உணர்த்திக் கொண்டே இப்பாடல்களை சொல்லி வருகையில்,
    .. இல்லாத வன்மங்கள் என்மீது ஏனம்மா?... எனப் பாட,
    சட்டென்று என் தவறு எனக்குப் புலப்பட்டது!

    இதைச் சொல்லும் போதெல்லாம் அவர் நினைவு எனக்கு வரும்!

    ReplyDelete
  3. ///பேய்பிள்ளையானாலும் தான் பெற்றபிள்ளையைப்
    பிரியமாய் வளர்க்கவில்லையோ///

    இந்தப் பொறுத்தருளும் குணத்தினால்
    தாய் தெய்வத்திற்கு நிகரானவளாகின்றாள்!
    ந்ல்ல வரிகள் அய்யா!
    ந்ன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  4. ஆம் ஆசானே!

    அது மட்டுமின்றி, இப்பாடலில், அந்தத் தெய்வத்தையே ஒரு தாயுடன் ஒப்பிட்டு, தாய்மைக்கு உயர்வு செய்திருக்கிறார் புலவர்!

    பொல்லாத பிள்ளை, பேய்பிள்ளை எவரானாலும், தாயின் கண்ணில் பிரியமானவர்களே!

    ReplyDelete
  5. வணக்கம் எஸ் கே அய்யா,

    நீங்கள் எழுதி வரும் காமாட்சி விருத்தம் எனக்கும் மிகவும் பிடிக்கும். நான் அம்மன் பக்தை. நீங்கள் எழுதியிருப்பத்தைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதில் நானும் கலந்து கொள்ள முடியுமா?

    அன்புத்தோழி

    ReplyDelete
  6. அன்புத்தோழியே!
    தங்களது அன்பான வேண்டுகோளை நண்பர் குமரனிடம் சமர்ப்பிக்கிறேன்!

    அம்மன் பக்தை இதில் கலந்து கொள்ள அவருக்குக் கசக்காது!

    ஜெய ஜெய காமாக்ஷி!

    ReplyDelete
  7. அன்புத்தோழி. உங்கள் மின்னஞ்சலுக்கு அழைப்பினை அனுப்பியிருக்கிறேன். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு விஎஸ்கே காமாக்ஷி அம்மன் விருத்தத்தை (11 பாடல்களை) இட்டு முடித்தப் பின்பு நீங்களும் அம்மனின் பாடல்களை இந்தப் பதிவில் இடுங்கள். தங்கள் பங்களிப்பிற்கு நன்றி.

    ReplyDelete
  8. காமாக்ஷி அம்மன் விருத்தம் yar ealuthiyathu?

    ReplyDelete
  9. காமாக்ஷி அம்மன் விருத்தம் yar ealuthiyathu?

    ReplyDelete