![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfpSBGLksP8ZF4d9Dw5fxrxPLHk7IFnlQBr7KMfLSBuei_a8t2IRi2mba8EcD_WNRucYhHrVJwvU_I70LDGILkTJ6b-gwIu9S8_5qtuFoJkCb13HaIZdN5kMNuBNMMx0hGadv8bFyGsg/s400/bhuvaneshwari.jpg)
பாதி மதிமுடி சூடும் இறைவியை
பாடி அனுதினம் பணிவோமே
தேடி அவள்பதம் நாடி தினம்தினம்
கோடி மலர்கொடு தொழுவோமே
சூழும் சுரர்முடி பாதம் தொடஅதில்
காலின் நகங்களும் ஒளிவீச
கூறும் அடியவர் சூடி மகிழ்ந்திட
பாத நறுமலர் அருள்வாயே
சாடும் வினைகெட நாடி தொழுபவர்க்
கோடி உதவிடும் துணைநீயே
வாடும் மனதினில் வாச மலரென
வந்து மலர்ந்திடும் என்தாயே
வேலன் வணங்கிட வேலை அருளிய
வேத முதல்வியைப் பணிவோமே
காலன் கடுகினும் காவல் வருமவள்
கால்க ளேசதம் அறிவோமே
--கவிநயா
சுப்பு தாத்தா காவடி சிந்து மெட்டில் பாடியிருக்கார்... நன்றி தாத்தா!