கேதாரம் மற்றும் முகாரியில் உணர்வுகளைக் குழைத்து சுப்பு தாத்தா பாடியிருப்பதைக் கேளுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
அன்னை அன்னை அன்னை என்று
அண்டி வந்தேன் உன்னையே
முன்னை பின்னை வினைக ளெல்லாம்
தீர்த்து வைப்பாய் அன்னையே!
ஆதியந்தம் ஏதும் இல்லா
அன் புருவே அன்னையே
பூதி பெற்ற முனிவர் களின்
முடி யிருக்கும் அன்னையே!
சோதி யோடு சோதியாகச்
சுடர்ந் தொளிரும் அன்னையே
மேதி னியில் எவரெனக்கு
பற்றிக் கொண்டேன் உன்னையே!
சோதனை மேல் சோதனைகள்
சூழ்ந் திருக்கும் போதிலும்
நாதமுன்றன் நாம மென்று
நம்பிக்கை தா அன்னையே!
பாவியேனும் பாவம் பலவும்
செய்தி ருக்கும் போதிலும்
பாதங்களைப் பற்றி விட்டேன்
பரிவு செய்வாய் அன்னையே!
நாதி யற்ற நாயனுக்கு
நல்ல வழி காட்டுவாய்
போதி மரமாகி வந்து
மாய இருள் நீக்குவாய்!
--கவிநயா
