Tuesday, March 31, 2009

பங்குனியில் ஒரு நவராத்திரி - 1 (மீனாட்சி பஞ்சரத்தினம்)



மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் குடமுழுக்குத் திருநாளை முன்னிட்டு இந்த 'அம்மன் பாட்டு' பதிவில் இன்று முதல் குடமுழுக்கு நன்னாளான ஏப்ரல் எட்டாம் நாள் வரை 'பங்குனியில் ஒரு நவராத்திரி' கொண்டாடப்படுகின்றது.

முதல் நாளாகிய இன்று அன்னையின் புகழினைப் பாடும் மீனாட்சி பஞ்சரத்தினம் என்னும் துதிப்பாடலைக் காண்போம்.

குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழை இங்கே காணலாம்.

உத்யத்பானு சஹஸ்ரகோடி சத்ருசாம் கேயூர ஹாரோஸ்வலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

உத்யத்பானு சஹஸ்ரகோடி சத்ருசாம் - ஆயிரம் கோடி உதயசூரியனின் ஒளிக்கு ஈடான ஒளியை உடையவளும்

கேயூர ஹாரோஸ்வலாம் - வளையல்கள், மாலைகள் போன்ற அணிகளால் ஒளிவீசுபவளும்

பிம்போஷ்டீம் - கோவைப்பழங்கள் போன்ற இதழ்களை உடையவளும்

ஸ்மித தங்க்த பங்க்தி ருசிராம் - புன்னகை புரியும் பல்வரிசைகள் உடையவளும்

பீதாம்பராலங்க்ருதாம் - பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும்

விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் - திருமால், பிரமன், தேவர் தலைவன் போன்றவர்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும்

தத்வ ஸ்வரூபாம் - உண்மைப் பொருளானவளும்

சிவாம் - மங்கள வடிவானவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்


முக்தாஹார லஸத் கிரீடருசிராம் - முத்துமாலைகளால் சூழப்பட்ட ஒளிவீசும் மௌலியை (மகுடத்தை) உடையவளும்

பூர்ண இந்து வக்த்ர ப்ரபாம் - ஒளி வீசும் முழுமதியைப் போன்ற திருமுகத்தை உடையவளும்

சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் - கிண் கிண் என்று ஒலி செய்யும் மாணிக்க சிலம்புகளை அணிந்தவளும்

பத்மப்ரபா பாஸுராம் - தாமரை போல் அழகு பொருந்தியவளும்

ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் - அடியவர்களின் ஆசைகள் அனைத்தையும் அருளுபவளும்

கிரிஸுதாம் - மலைமகளும்

வாணீ ரமா ஸேவிதாம் - கலைமகளாலும் அலைமகளாலும் வணங்கப்பட்டவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.



ஸ்ரீவித்யாம்
சிவவாமபாகநிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் ஸ்ரீமத் சபாநாயகீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்


ஸ்ரீவித்யாம் - மறைகல்வி வடிவானவளும்

சிவவாமபாகநிலயாம் - சிவபெருமானின் இடப்பாகத்தில் வசிப்பவளும்

ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம் - ஹ்ரீம் என்ற வித்தெழுத்து மந்திரத்தில் (பீஜாக்ஷர மந்திரம்) ஒளி வீசி இருப்பவளும்

ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் - ஸ்ரீசக்ரத்தின் நடுவட்டத்தில் வசிப்பவளும்

ஸ்ரீமத் சபாநாயகீம் - சுந்தரேசுவரனின் சபைக்குத் தலைவியும்

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் - ஆறுமுகனான முருகனையும் தடைகளை நீக்கும் விநாயகனையும் பெற்றவளும்

ஸ்ரீமத் ஜகன்மோஹினீம் - உலகங்களை மயக்குபவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் பயஹராம் ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாசனார்ச்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் நானாவிதாமம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் - சுந்தரேசருடைய நாயகியும்

பயஹராம் - அடியவர்களுடைய பயத்தை நீக்குபவளும்

ஞானப்ரதாம் - அடியவர்களுக்கு பேரறிவை (ஞானத்தை) நல்குபவளும்

நிர்மலாம் - குறையொன்றும் இல்லாதவளும்

ச்யாமாபாம் - கருநீல நிறம் கொண்டவளும்

கமலாசன அர்ச்சித பதாம் - தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் அருச்சிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும்

நாராயணஸ்ய அனுஜாம் - நாராயணனுடைய தங்கையும்

வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் - யாழ், குழல், மிருதங்கம் முதலியவற்றின் இசையை இரசிப்பவளும்,

நானாவிதாம் அம்பிகாம் - பல்விதமான உயிர்களுக்கு அன்னையும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

நாநா யோகி முநீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் நாநார்த்த சித்திப்ரதாம்
நாநா புஷ்ப விராஜிதாங்க்ரியுகளாம் நாராயணேனார்ச்சிதாம்
நாதப்ரஹ்மமயீம் பராத்பரதராம் நாநார்த்த தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

நாநா யோகி முநீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் - சிறந்த யோகிகள், முனிவர்கள் போன்றவர்களின் இதயத்தில் என்றும் வசிப்பவளும்

நாநார்த்த சித்திப்ரதாம் - வேண்டும் அனைத்துப் பொருட்களையும் தருபவளும்

நாநா புஷ்ப விராஜித அங்க்ரியுகளாம் - எல்லாவிதமான பூக்களாலும் அழகு பெற்ற திருவடிகளை உடையவளும்

நாராயணேன அர்ச்சிதாம் - நாராயணனாலும் அருச்சிக்கப்பட்டவளும்

நாதப்ரஹ்மமயீம் - நாதபிரம்ம உருவானவளும்

பராத்பரதராம் - உயர்ந்ததிலும் உயர்வானவளும்

நாநார்த்த தத்வாத்மிகாம் - அனைத்துப் பொருட்களிலும் உள்நின்று இயக்குபவளும்

காருண்யவாராம் - கருணைக்கடல் ஆனவளும்

நிதிம் - பெரும் செல்வம் ஆனவளும் ஆன

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

Monday, March 30, 2009

தங்கமணி மண்டபத்தில்...



தங்கமணி மண்டபத்தில்
தங்கத்தாய் உன்னைக் கண்டேன்
தாமரையே தாமரையில்
வீற்றி ருக்க அதிசயித்தேன்

முத்துமணி ஆரங்கள்
மங்கையுன்மேல் தவழக் கண்டேன்
முத்துமுத்துப் புன்னகையில்
முத்தின் ஒளி மங்கக்கண்டேன்

பட்டாடை பரவசமாய்
பாவையினைத் தழுவக் கண்டேன்
விட்டோடி வேதனைகள்
விரைந்து ஓடி மறையக்கண்டேன்

சித்திரம்போல் மேனியதில்
சிங்காரம் கொஞ்சக் கண்டேன்
பத்திரமாய் உன்னைநெஞ்சில்
பொக்கி ஷமாய் பதுக்கிக்கொண்டேன்!

--கவிநயா

Wednesday, March 25, 2009

லலிதா நவரத்தினமாலை 7

9. வைடூரியம்

வலை ஒத்த வினை கலை ஒத்த மனம்
மருளப் பறை ஆர் ஒலி ஒத்த விதால்
நிலையற்று எளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலைவற்று அசைவற்று அநுபூதி பெறும்
அடியார் முடி வாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

எப்போதோ ஒரு முறை, மிக மிக அரிதாக, மனம் குவிந்து இறையருளை எண்ணி மனம் நிறைந்து மகிழ்வும் அமைதியும் கூடி இறை தாள் வணங்கி எச்செயலும் ஈசன் செயல் எனும் மன நிலை ஓரிரு நாழிகையாவது இறையருளால் நிகழ்கிறது. பெரும்பாலான நேரங்களில் அப்படி ஒரு நிலை இருக்கிறது; அதனை அனுபவித்திருக்கிறோம்; அந்நிலையிலேயே நிலையாக நிற்பது தான் பெருநிலை என்பதே மறந்து போகின்றது. அப்படி அரிதாக கிடைக்கும் மனநிலை மாறும் படியும் அந்நிலையே மறக்கும் படியும் செய்வது என்ன என்று பார்த்தால் உலக ஆரவாரங்களால் தள்ளப்பட்டு மருண்டு நாம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான சிறு பயனோ பயனே இல்லாததோ ஆன பல செயல்களில் ஈடுபட்டு அதில் சிக்கிக் கிடக்கிறோம் என்று தெரிகிறது. எச்செயலும் ஈசன் செயல் என்று இறையின் திருவுள உகப்பிற்கு ஏற்ற செயல்களில் அமைதியாகவும் மகிழ்வுடனும் ஈடுபடும் போது வைத்த நிதி, குடும்பம், குலம், கல்வி என்று பலவிதமான ஆரவாரங்கள் நம்மைச் சூழ்ந்து நம்மைப் பிடித்துச் செயல்களில் தள்ளுகின்றன; அவை சுயநலமான செயல்களாகையால் ஈசன் செயல் எனும்படியாக இல்லை; அதனால் அமைதியும் மகிழ்ச்சியும் தொலைந்து பதட்டமும் ஆர்ப்பாட்டமுமாகவே அச்செயல்கள் செய்யப்படுகின்றன. 'யோக க்ஷேமம் வஹாம்யஹம் - உனக்கு வேண்டியதைத் தரும் பொறுப்பையும் உன்னிடம் ஏற்கனவே இருப்பதைக் காக்கும் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்' என்ற இறை உறுதி மொழி அறிந்திருந்தும் செல்வம், குடும்பம் போன்றவற்றை நாமே நம் முயற்சியால் காப்பாற்ற வேண்டும்; இயலும் என்ற இறையருளின் அடிப்படையாக அமையாத செயல் ஊக்கங்களால் கட்டப்படுகிறோம்.

செயல்கள் எல்லாம் வலையைப் போல் நம்மைச் சுற்றிப் பிணைத்துக் கட்டுப்படுத்துகின்றன. வலை ஒத்த வினை.

மனமோ அவ்வலையில் அகப்படும் மானைப் போல் இருக்கின்றது. கலை ஒத்த மனம்.

அந்த மனம் எனும் மான் மருண்டு செயல்கள் என்னும் வலையில் விழும் படி ஆரவாரமான ஒலியை எழுப்பும் பறையைப் போல் இந்த உலகம். மருளப் பறை ஆர் ஒலி ஒத்த விதால்.

உன்னருளையே முன்னிட்டு எல்லாச் செயல்களையும் உன் திருவுள உகப்பிற்காகவும் திருமுக உல்லாசத்திற்காகவும் செய்யும் நன்னிலையை விட்டு நீங்கி அடியேன் வீணாகிப் போகலாமா? நிலையற்று அடியேன் முடியத் தகுமோ?

நான் என் தனி முயற்சியால் என் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன்; செல்வம் சேர்க்கிறேன்; குடும்பப்பெருமையைக் காக்கிறேன் என்று தன்முனைப்புடன் அமைதியின்றி ஆரவாரத்துடன் செயல்களை ஆற்றாமல் உன்னருளையே முன்னிட்டு அச்செயல்களை எல்லாம் செய்யும் நிலை தருவாய். என் செயலால் இங்கு ஆவதொன்றில்லை; நின் செயலே என்று அறிந்தேன் - என்று சொல்லும் நிலை தருவாய். மனைவி மக்கள் செல்வம் என்ற இவற்றையெல்லாம் நான் காக்கிறேன் என்ற எண்ணமே என்னைக் கட்டிப் போடும் சங்கிலியாக இருக்கிறது. இந்தச் சங்கிலி தூள் தூளாகி மனைவி மக்கள் செல்வம் எல்லாவற்றையும் நீயே என்னை ஒரு கருவியாக இயக்கிக் காத்துக் கொள்கிறாய் என்ற எண்ணம் வரும் படி செய்வாய். 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' என்றாற்போல இச்சங்கிலியாகிய நிகளம் தூள்தூளாகப் போகும் வரம் தருவாய். நிகளம் துகளாக வரம் தருவாய்.

நான் செய்கிறேன், இது எனது, இதனைக் காக்கவேண்டும் என்றெல்லாம் இங்குமங்கும் அலையும் நிலையை நீங்கி அசைவற்று இறையருளில் மூழ்கித் திளைக்கும் ஆனந்த அனுபவம் பெறும் அடியவர்களின் திருமுடி மேல் ஒளிரும் வைடூரியமே. அலைவற்று அசைவற்று அநுபூதி பெறும் அடியார் முடி வாழ் வைடூரியமே.

பொதிகை மலையைத் தன்னுடைய கொடியாகக் கொண்ட மலையத்துவச பாண்டியனின் திருமகளே மீனாட்சியே வருவாய். மலையத்துவசன் மகளே வருவாய்.

அன்னையே. லலிதாம்பிகையே. உனக்கே வெற்றி. மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

நூற்பயன்:

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அன்னையின் திருவருளுக்கு இசைவாக 'லலிதா நவரத்தினமாலை' என்னும் இத்துதி நூலை நாள்தோறும் படிப்பவர்கள் அற்புத சக்தி எல்லாம் அடைவார்கள். சிவரத்தினமாகத் திகழ்வார்கள்.

மாதா லலிதாம்பிகையே! உனக்கே வெற்றி! வெற்றி! வெற்றி!

(லலிதா நவரத்தினமாலை நிறைவுற்றது)

Monday, March 23, 2009

அன்னை அவளை நெஞ்சில் வை !



அன்னை அவளை நெஞ்சில்வை - அவள்
முன்னை வினைகளை ஓட்டிடுவாள்
விண்ணையும் மண்ணையும் படைத்த அவளே
உன்னையும் என்னையும் காத்திடுவாள்

முக்காலங்களும் அறிந்தவள் அவளே
எக்காலத்திலும் துணையிருப்பாள்
சொக்கநாதரின் சுந்தரி அவள்தம்
பக்கத்தில் நமக்கிடம் தந்திடுவாள்

லீலைகள் பலவும் புரியும் அவளே
மாயை களையும் களைந்திடுவாள்
மனதின் மயக்கம் நீக்கிடுவாள் - தனை
அடையும் மார்க்கமும் காட்டிடுவாள்

அன்பே உருவாய் அமைந்தவளாம் - அவள்
அருளாய் உள்ளில் உறைபவளாம்
கடலாம் கருணை நிறைந்தவளாம் - நமைக்
கனிவாய்க் காக்கும் தாய் அவளாம்!


--கவிநயா

Thursday, March 19, 2009

பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள் !

வழக்கத்திற்கு மாறாதான்... ஆனா ஏனோ இன்னிக்கு இந்த பாடலை பதிய தோணிச்சு. ஏற்கனவே நவராத்திரிக்காக இங்கே பதிஞ்சதுதான்...

சுப்பு தாத்தா பாடித் தந்தது இங்கே இருக்கு.





வீரதுர்க்கை வடிவெடுத்து வினைகள் தீர்க்க வந்தவள்!
தீரவேங்கை யாகி வந்து அசுரர்களை வென்றவள்!

கோபத்திலே தகதகத்து நெருப்பைப் போல ஜொலிப்பவள்!
வேகத்திலே சுழன்றடித்து காற்றைக் கூட ஜெயிப்பவள்!

மோகத்திலே உழலும் மனதின் மாயம் நீக்குகின்றவள்!
சோகத்திலே துவளும் போது தோள் கொடுக்கும் தாயவள்!

தேவருக்கு அருள வென்றே தோற்றம் கொண்டு வந்தவள்!
மூவருக்கும் முதல்வியாகி முத் தொழில்கள் புரிபவள்!

காளி யாகி வந்த போதும் கனிந்த அன்பால் குளிர்ந்தவள்!
நீலியாகி சூலியாகி தீமை எரிக்கும் தீ அவள்!

ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு அச்சம் நீக்க வந்தவள்!
பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள்!

நேசம் கொண்ட நெஞ்சுக்குள்ளே தேசு கொண் டொளிர்பவள்!
வீசும் தென்ற லன்பில் எந்தன் மாசு நீக்கு கின்றவள்!

சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!
வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!

ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே!
எட்டுத் திக்கும் ஏத்தும் எங்கள் அன்னை அடிகள் பணிகவே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://i151.photobucket.com/albums/s140/sidatha/durga_QA91_l.jpg