Monday, February 23, 2015

வர வேணும்!


(தாலாட்டு பாட்டு மெட்டில் வந்தது... சுப்பு தாத்தா எந்த மெட்டில் அமைக்கிறார்னு பார்க்க ஆவல்...!)

சுப்பு தாத்தா அமைத்த ஆனந்த பைரவி ஆனந்தமாக இருக்கிறது. மிக்க நன்றி தாத்தா!



கண்ணே என் கண்மணியே!
கற்கண்டே அற்புதமே!
பொன்னே என் பூவிழியே!
புதுகை நகர் மாமணியே!

வேதங்கள் பாடும் உன்னை
பேதையும் பாடுகின்றேன்!
பேதமின்றிக் காப்பவளே
வேகங்கொண்டு வர வேணும்!

பாகந் தந்த பார்வதியே
பைங்கிளியே வர வேணும்!
நாகங் கொண்ட நாதனுடன்
நாயகியே வர வேணும்!

வானவரெல்லாம் போற்ற
வண்ண மயில் வர வேணும்!
மானிடரெல்லாம் போற்ற
மாதாவே வர வேணும்!

சோகங்களெல்லாம் போக்க
சுந்தரியே வர வேணும்!
மோகங்களெல்லாம் தீர்க்க
முத்தழகி வர வேணும்!

எண்ணுகின்ற எண்ணம் எல்லாம்
ஏந்திழையே வர வேணும்!
சொல்லுகின்ற சொல், பொருளில்
சொக்கனுடன் வர வேணும்!

பண்ணும் செயல் யாவையிலும்
பங்கயமே வர வேணும்!
பார்க்கும் பொருள் யாவையிலும்
பாவை முகமே வேணும்!

வேத வடிவானவளே
விரைந்திங்கு வர வேணும்!
நாத வடிவானவளே
நம்பிக்கை தர வேணும்!


--கவிநயா

2 comments:

  1. அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஷைலன். பதில் எழுத தாமதமாயிடுச்சு, மன்னிச்சுக்கோங்க ப்ளீஸ்.

      Delete