Thursday, March 19, 2009

பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள் !

வழக்கத்திற்கு மாறாதான்... ஆனா ஏனோ இன்னிக்கு இந்த பாடலை பதிய தோணிச்சு. ஏற்கனவே நவராத்திரிக்காக இங்கே பதிஞ்சதுதான்...

சுப்பு தாத்தா பாடித் தந்தது இங்கே இருக்கு.





வீரதுர்க்கை வடிவெடுத்து வினைகள் தீர்க்க வந்தவள்!
தீரவேங்கை யாகி வந்து அசுரர்களை வென்றவள்!

கோபத்திலே தகதகத்து நெருப்பைப் போல ஜொலிப்பவள்!
வேகத்திலே சுழன்றடித்து காற்றைக் கூட ஜெயிப்பவள்!

மோகத்திலே உழலும் மனதின் மாயம் நீக்குகின்றவள்!
சோகத்திலே துவளும் போது தோள் கொடுக்கும் தாயவள்!

தேவருக்கு அருள வென்றே தோற்றம் கொண்டு வந்தவள்!
மூவருக்கும் முதல்வியாகி முத் தொழில்கள் புரிபவள்!

காளி யாகி வந்த போதும் கனிந்த அன்பால் குளிர்ந்தவள்!
நீலியாகி சூலியாகி தீமை எரிக்கும் தீ அவள்!

ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு அச்சம் நீக்க வந்தவள்!
பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள்!

நேசம் கொண்ட நெஞ்சுக்குள்ளே தேசு கொண் டொளிர்பவள்!
வீசும் தென்ற லன்பில் எந்தன் மாசு நீக்கு கின்றவள்!

சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!
வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!

ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே!
எட்டுத் திக்கும் ஏத்தும் எங்கள் அன்னை அடிகள் பணிகவே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://i151.photobucket.com/albums/s140/sidatha/durga_QA91_l.jpg

Monday, March 16, 2009

வேணும்...




ஒம் மேல தெனம் நூறு
பாட்டெழுத வேணும்
ஓயாம ஒம் புகழ
நாம் பாட வேணும்
எம் பாட்டக் கேட்டதும் நீ
ஓடி வர வேணும்
மகுடி கேட்ட நாகம் போல
மயங்கி வர வேணும்

கண் காணும் காட்சியெல்லாம்
நீயாக வேணும்
செவி கேக்கும் ஒலியிலெல்லாம்
ஒங்கொரலே வேணும்
ஒன் நெனப்பே நொடிதோறும்
எம் மனசில் வேணும்
ஒன்னடியே கதி யின்னு
நாந் துதிக்க வேணும்!


--கவிநயா

Monday, March 9, 2009

வேறென்ன வேண்டும் அம்மா?



வேறென்ன வேண்டும் அம்மா? - அம்மா
வேறென்ன வேண்டும் அம்மா?

ஈடில்லாப் பேரெழிலை
இமையாமல் பார்த்திருக்க
எந்தனுயிர் உந்தனையே
தஞ்சமென்று அடைந்திருக்க

(வேறென்ன)

வல்வி னைகளும் உன்னை
கண்டு மிரண் டோடிடுமே
காரி ருளும் கண்ணொளியில்
சின்னத் தூசாய்ச் சிதறிடுமே

உள்ள மெங்கும் ஒருஇன்பம்
ஊடு ருவிப் பரவிடுமே
உந்தன் அன்பை எண்ணிஎண்ணி
கண்ணில் நீரும் பெருகிடுமே

(வேறென்ன)


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://vidursury.blogspot.com/2008/10/blog-post_05.html

Tuesday, March 3, 2009

லலிதா நவரத்தினமாலை 6

7. கோமேதகம்

பூ மேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீ மேல் இடினும் ஜெய சக்தி என
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர் வான் நிலவே
குழல்வாய்மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அன்னையே. முன் செய்த நல்வினைத் தீவினைப் பயனாக இந்த பூமியின் மேல் பிறந்திருக்கும் நான் அவ்வினைப்பயன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வினைப்பயன்களை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறேனா என்றால் இல்லை; மேன்மேலும் வினைகள் செய்து கொண்டிருக்கிறேன். எந்த செயலும் செய்யாமல் இருக்க இவ்வுலகில் பிறந்த எவ்வுயிரினாலும் இயலாது. அதனால் நான் விரும்பியோ விரும்பாமலோ செயல்களைச் செய்து கொண்டிருக்கிறேன். அச்செயல்களில் சில தன்முனைப்புடன் செய்யப்படுகின்றன; சில பிறர் நன்மையை வேண்டிச் செய்யப்படுகின்றன; பிற வேறு வகைகளில் அமைகின்றன. இச்செயல்கள் எல்லாம் குறைவில்லாது நற்பயன்களைத் தரவேண்டுமென்றால் என் முயற்சி மட்டுமே போதாது. அதற்கு உன் திருவருளும் வேண்டும். பூ மேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாது பயன் குன்றா வரம் தருவாய்.

அச்செயல்களைச் செய்யும் போது உன்னருளினை முன்னிட்டு வரும் தடைகளை எல்லாம் தாண்டும் படி செய்வாய். அத்தடைகள் எப்பேர்ப்பட்டனவாக இருந்தாலும் சரி - தீயில் இடும்படியான தடையாக இருந்தாலுமே சரி - மனத்திடத்துடன் 'ஓம் சக்தி ஜெய் சக்தி' என்று உன் திருநாமங்களை மொழிந்து அத்தடைகளைத் தாண்டும் திறனைத் தந்தருள்வாய். தீ மேல் இடினும் ஜெய சக்தியென திடமாய் அடியேன் மொழியும் திறன் தருவாய்.

கோமேதக மணியைப் போல் அழகுடன் ஒளி வீசுபவளே. வானத்தில் திகழும் குளிர்ந்த நிலவே. புல்லாங்குழலின் இன்னிசையைப் போன்ற குரலினை உடையவளே. நீ வருவாய். அருள் தருவாய். கோமேதகமே குளிர் வான் நிலவே குழல்வாய்மொழியே வருவாய் தருவாய்.

மகாமேருவில் பிந்து நிலையத்தில் என்றைக்கும் நீங்காது நின்று அருள் புரியும் கிளியைப் போன்றவளே. அன்னையே. லலிதாம்பிகையே. உனக்கே வெற்றி உண்டாகட்டும். மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


8. பதுமராகம்:

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ரகலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபினி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

இன்பங்களை அருள்பவளே ரஞ்சனி. இன்பமே வடிவானவளே நந்தினி. அழகிய திருக்கண்களை உடையவளே அங்கணி. பதுமராக மணியின் ஒளியில் நிறைந்தவளே பதுமராக விகாச வியாபினி. அன்னையே அம்பா.

நிலையில்லாமல் அங்கும் இங்கும் அலையும் மனத்தினை அந்நோய் தீர்ந்து ஒரு நிலைப்படுமாறு செய்பவளே சஞ்சல ரோக நிவாரணி. அனைத்துக் கலைகளின் இருப்பிடமே வாணி. மகிழ்வினைத் தருபவளே சாம்பவி. சம்புவின் சக்தியே சாம்பவி. நிலவைத் திருமுடியின் மேல் அணிந்தவளே சந்த்ரகலாதரி. தலைவியே ராணி.

மை நிறம் கொண்டவளே அஞ்சன மேனி. எல்லாவித அணிகலன்களும் அணிந்தவளே அலங்க்ருத பூரணி. மரணமில்லாப் பெருவாழ்வின் திருவுருவே அம்ருத சொரூபிணி. என்றும் மங்கலகரமானவளே நித்ய கல்யாணி.

அழகே உருவான மேரு மலையின் மேல் என்றைக்கும் வாழ்பவளே மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி. அன்னையே லலிதாம்பிகையே உனக்கே வெற்றி. மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

Monday, March 2, 2009

மீட்பது உந்தன் பொறுப்பு!



நீரில் விழுந்த தீக்குச்சி போல
பாவத்தில் என்மனம் விழுந்ததம்மா
நீரை விட்டு நின்னைப் பற்ற
நித்தம் நித்தம் முயலுதம்மா

கண்மணி உந்தன் அருமை தெரிந்தும்
என்மனம் ஏனோ அலைகிறதே
ஒளியின் தேவை நன்கறிந்திருந்தும்
இருளில் மூழ்கிக் கிடக்கிறதே

மாயையின் சுழலில் மரக்கலம்போல்நான்
மறுகுவ துனக்குத் தெரியலையோ? - புதை
குழியில் உன்பிள்ளை புதையும் முன்னே
மீட்பது உந்தன் பொறுப்பில்லையோ?

கண்கள் திறப்பாய் கருணை அளிப்பாய்
கரையேற்ற உடன் வந்திடுவாய்
மௌனம் துறப்பாய் ம(க்)களைப் பார்ப்பாய்
மயக்கம் தெளிவிக்க வந்திடுவாய்

--கவிநயா

("மகளை"ங்கிறதை "மக்களை"ன்னு மாத்திட்டேம்ப்பா! )

படத்துக்கு நன்றி: http://www.servekrishna.net/images/static/kurma/srilalitadevi.jpg