Monday, November 11, 2013

பொன்னார் மேனியன் சிவனின் உமையே! - 2


மின்னற் கொடியிடை இமவான் மகளே
சின்னக் கனியிதழ் மலர்வாய் அமிர்தே
வன்னப் பூவென மணப்பாய் மனதே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (5)

அன்னப் பறவையும் நாணும் நடையே
கன்னங் கருங்குயில் நாணும் குரலே
மின்னல் எனக்கடை விழியால் அருளே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (6)

எண்ணும் மனதினில் உறைவாய் எழிலே
சொல்லும் வாக்கினில் வருவாய் சுவையே
பண்ணும் செயலினில் ஒளிர்வாய் மணியே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (7)

கன்னற் தமிழ்க் கவி தருவாய் கனியே
பின்னும் ஒருவரம் அருள்வாய் இனியே
இன்னும் எனதன்பில் நனைவாய் சிவையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (8)


--கவிநயா

(தொடரும்)

No comments:

Post a Comment