Thursday, August 28, 2014

விநாயகுனி



விநாயகுனி
படிப்பறிவற்ற குக்கிராம இளைஞன்  ஒருவன் 
பரமாச்சார்யார் முன்னமர்ந்து விநாயகுனி பாட்டைப்பாடு[?]கிறான்.

இசைக்கொலை +மொழிக்கொலை : > ((

பெரியவர்: நீ இந்தப்பாட்டு பாடினதுக்குஎன்னகாரணம்?
இளைஞன் "அனாதரக்ஷகி ஸ்ரீகாமாக்ஷி "ன்னு வரதுதான் .பெரிவாளே காமக்ஷிதான்னு ரொம்பபேர் சொல்லியிருக்கா .எனக்கும் பெரிவாளைப் பாத்தா அப்படித்தான் தோணித்து .
பெரி:அனுபல்லவில காமாக்ஷின்னு வந்துது .ஆனா பல்லவி
விநாயகுனி-ன்னுனா இருக்கு . ஒருவேளை பாட்டு பிள்ளையார்பேர்ல இருக்குமோ என்னமோ ?நீபாட்டுக்கு கமாக்ஷிபாட்டுன்னு பாடிட்டியே !
இளை :[கண்ணில் நீர் தளும்ப]என்ன தப்பிருந்தாலும் பெரிவா மன்னிச்சுக்கணும் .
[பெரிவா பிள்ளையை சமாதானப் படுத்திய வாறு  அருகிருந்த 
எழுத்தாளர் கணபதியைப் பல்லவிக்குப் பொருள் கேட்க ]
கணபதி :"பிள்ளையாரைப்போலவே  என்னையும் நெனச்சு ரக்ஷி !உன்னைவிட்டா வேறு தெய்வம் யாரம்மா?அனாதைகளை ரட்சிப்பவளே!நல்லஜனங்களின்  பாபத்தைக் களையரவளே !சங்கரி! தாயே!"ன்னு பாடறார் .
பெரி :காமக்ஷியைப்பார்த்துப் பாடற  த்யாகையர் எதுக்காக "வினாயகரை ரக்ஷிக்கிறமாதிரி என்னையும் ரக்ஷி "ன்னு  ஆரம்பிக்கணும்?
கண :இதைப்பத்தி பெரிவா புதுசா ஏதோ சொல்றதுக்கு இருக்கு - சொல்லணும் !
பெரி: எனக்கு என்ன தோணித்துன்னா --
[த்யாகையரின் காமாக்ஷி தரிசனத்தை உடனிருந்து பார்த்ததுபோல திரைப்படச்சுருளாக அவிழ்த்து விடுகிறார் ]
த்யாகையார் கோயிலுக்கு மொதல் தடவையா  வந்திருப்பார்.கோபுரவாசலில்  நுழையறபோதே வலதுபக்கத்தில ஒரு ஸ்தம்பத்தில நர்த்தன வினாயகரைப் பார்த்திருப்பார் ;அதோட உள்ளே ,நேரே சிந்தூர வினாயகரைப்பார்த்திருப்பார் ; உள் பிரஹார ஆரம்பத்திலே வலதுபக்கம் ஆதிசேஷன்னு ஒரு சந்நிதி -அங்கேயும் சின்னதா ஒரு விநாயக பிம்பம் பார்த்திருப்பார்;அப்படியே உள்ளேபோனா ஜெயஸ்தம்பம் தாண்டினதும் சுவர்லே சின்ன பிள்ளையார் புடைப்புச்சிற்பம் -பக்கத்துலே முழுசாவே
இன்னொரு பிள்ளையார் ;
பிரதக்ஷிணம் வரச்ச பள்ளியறைக்கு நேரே நல்ல ஆக்ருதியா இஷ்டசித்தி வினாயகர்னு ஒத்தர் ஒக்காந்திருக்கிறதைப் பார்த்திருப்பார் ;உத்சவ காமாக்ஷி சந்நிதி வாசல்லே ரெண்டுபக்கமும் பிள்ளையார் -முருகன் ;அங்கேந்து மேற்காலபார்த்தாத் தெரியர மூலகாமாக்ஷி சந்நிதி
வெளிச்சுவர்லேயும் பிள்ளையார்-முருகரைப் பார்த்திருப்பார் ;
சுத்திக்காட்ட வந்தவா உத்சவகாமாக்ஷி சந்நிதி தாண்டரச்சே த்யாகையரிடம் ,"இங்கே மௌனமாப் போகணும்,ஏன்னா இங்கே துண்டீர மகாராஜா தபஸ்லே இருக்கார் "னு  சொல்லி அவரோட பிம்பத்தையும் காட்டி, "இந்தப்ரதேசத்து மொதல் ராஜா ஆகாசபூபதி அம்பாளுக்குத் தபசிருந்து கெடச்ச  புத்ரர் இவர் ;அம்பாள் தன் கொழந்தை கணபதியத்தான் அப்படிப் பொறப்பிச்சா,அதனால்தான் இவருக்குத் துண்டீரர்னு பேர் ; இந்தப்ரதேசத்துக்கு துண்டீரமண்டலம்னு பேர்-தமிழ்ல
'தொண்டைமண்டலம்' னு சொல்றோம் ; பிரிந்த பதியை மறுபடிப்பெற அம்பாள் ப்ருத்விலிங்கபூஜை பண்ணி தபசிருக்கறப்போ எண்ணான்கு அறம் பண்ணினா;பதியத்திரும்ப அடைஞ்சதும் இந்த அறங்கள்
தொடரணும்னு துண்டீரருக்கு ராஜாபட்டம்கட்டி தர்மபாலனம் 
பண்ணச்சொன்னதா  ஸ்தலபுராணத்ல இருக்கு " ன்னு சொல்லியிருப்பா ;
மேற்கால திரும்பி பிரதட்சிணம் போறப்போ பங்காரு காமாக்ஷி [காலி] சந்நிதி வாசல்ல ரெண்டு பக்கமும் பிள்ளையார்-முருகர் இருக்கறதைக் கவனிச்சிருப்பார் ;கர்ப்பக்ரஹவாசல்லயும் ரெண்டுபேரும் அவரை வரவேத்திருப்பா ;மூலஸ்தானத்ல நம்ப அம்பாளை தர்சித்து உருகி  வாய் தொறந்து பாட முடியாம போயிருப்பார்;அர்ச்சகர் அர்ச்சனை முடிஞ்சதும், 
"மாம் அம்புரவாசினிபகவதி ஹேரம்பமாதா [அ]வது"ன்னு முடியற அம்பாள் பஞ்சகம பாடியிருப்பா ;இதுவரை கண்ணாலே அனேக கணேசமூர்த்திகளைப் பார்த்தவர் இப்போ காதாலேயும்  அந்தப்பிள்ளையோட அம்மாவா அம்பாளைப் ப்ரார்த்திக்கிற ஸ்லோகத்தைக் கேட்டதும் மனசில நன்னா பதிஞ்சிருக்கும்;
குங்குமப் பிரசாதம் கொடுக்கறப்போ அர்ச்சகாள், "இதை அரூபலக்ஷ்மிக்கு அர்ப்பணம் பண்ணிட்டுத்தான் இட்டுகணும்"னு சொல்லி அந்தப்பக்கம் அழச்சிண்டு போக,அங்கயும் கிழக்கு முகமா  சௌபாக்யகணபதி ஒக்காந்திருப்பதப் பார்த்திருப்பார் ;அந்த உள் அங்கணத்திலயும் தெற்கு முகமா  சந்தான கணபதி இருப்பதைக் கவனித்திருப்பார் ;சந்நிதிய விட்டு ஜெயஸ்தம்பத்துக்கு வந்தா ஆரம்பத்ல வர பிள்ளையாரே
ஸ்தம்பத்துக்கு மேலண்டைப்பக்கம் இருப்பதை பார்த்திருப்பார் ."இவரை வேண்டிண்டாத்தான்
அம்பாள் தர்சன பலன்சித்திக்கும் -வரசித்தி வினாயகர்னு பேரு"ன்னு வழியனுப்ப வந்தவா சொல்லியிருப்பா .
கோவில்லேந்து மடத்துக்கு வந்து விச்ராந்தி பண்ணறப்போ அம்பாள் தர்சனமும் ,அவளோட க்ருபைக்குப் பாத்ரமாயி கோவில் பூரா பலரூபத்ல இருந்த பிள்ளையாரின் பாக்யமும் அவரோட அடிமனசுல  சொழண்டுண்டு இருந்திருக்கும் ;காமாக்ஷியப்பத்தி சாஹித்யம் பொங்கிண்டு வந்திருக்கும் ;அந்த விக்னேஸ்வரரோட பாக்யமும் முண்டிண்டு வாக்குல மொதல்ல வர ,"அந்தப் பிள்ளை மாதிரி என்னையும் நெனச்சி க்ருபை பண்ணும்மா"ன்னு பொருள்பட 'விநாயகுனி---'ன்னு கீர்த்தனம்
அமைஞ்சிருக்கும் ;சாயரக்ஷை மறுபடி கோயிலுக்குப் போய் அம்பாள் சந்நிதியிலே பரவசமாப் பாடி இருப்பார் .
எப்படி ஓடித்து என் கற்பனைக் குதிரை ?"
என்று கேட்டுவிட்டு நிர்மல வெள்ளமாய்ச் சிரிக்கிறார் .
          விநாயகுநி பாட்டைத் தமிழில்[கீழுள்ளபடி] எழுத என்னை உந்தியது இந்தக் கட்டுரைதான் .
[அந்த அப்பாவிப்பிள்ளையுடன் பெரியவர் பேசிய விவரங்களைப படித்தால் கண்கள் குளமாகிவிடும் ]




[சுப்புசார் பாடுகிறார் -> https://www.youtube.com/watch?v=Zc4ZGo0d5CQ&feature=em-share_video_user]
பல்லவி 
வேழமுகப்பிள்ளையைப்போல் என்னையும் நீ பாரம்மா;
ஏழையேனுக்குன்னையன்றி  
வேறு தெய்வம் யாரம்மா?



[vināyakuni valenu brōvavē ninu
vinā vēlpulevarammā]  

அனுபல்லவி 
நாதியற்றோர் நலம் காக்கும்  காமாக்ஷி !
நல்லோர் வினை முறிக்கும் தாயே !சங்கரி 
!

[anātha rakṣaki śrī kāmākṣi
su-janāgha mōcani śaṃkari janani]      



சரணம் (1)
உன்வரம் பெற்ற ஈனர்  இழைத்திடும் இன்னல்களால் 
விண்ணோரும் மண்ணோரும் 
துன்புறுதல்  முறையோ   ?
கஞ்சமுகக் காமாக்ஷி
அஞ்சும் அடியார்க்குன் 
அம்புயக்கரங்காட்டி 
அபயம்  நீ தாராயோ ?

[1narādhamulakunu varālosagan-
2uṇḍramulai bhūsurādi dēvatalu
3rāyiḍini jenda rādu daya
jūḍa rādā kāñcī purādi nāyaki
4 ]
  

சரணம் (2)
பாரோர் பொருட்டு அயன் பணிந்துனை வேண்டிடவும் 
பேரமைதியின் வடிவாய்  
அமர்ந்த அருட்கடலே !
சீரடி தொழும்  தீனர்  
மீதுந்தன் பேரருட் 
பார்வை பதிக்க இன்னுந்  
தாமதித்தல்  தகுமோ?

[5pitāmahuḍu jana hitārthamai
ninnu tā teliya vēḍa tāḷimi gala-
avatāramettiyikanu tāmasamu
sēya tāḷa jālamu natārti hāriṇi ]

சரணம் (3)
தோகைமுடியில் மதிசூடும் பராசக்தி !
 மூகரைப் பேசவைத்த பேரருள் வாரிதி!
த்யாகராயரிதயத் தாமரை தனிலுரை
 
ராகவனின் திருத் தங்கையே !தயாநிதி!
[purāna dayacē 6girālu mūkuniki
rā jēsi brōcu rāja dhari 

tyāgarājuni hṛdaya 7sarōjamēlina
rāma sōdari 8parāśakti nanu]




[நன்றி : அமரர் கணபதியின்  "மகாபெரியவாள் விருந்து" ]



    



5 comments:

  1. விநாயகுனி -- அருமையான கற்பனை. அழ்கான பாடல்விளக்கம்.. பாராட்டுக்கள் .

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. பாட்டு த்யாகையருடையது ;

      கற்பனைக்கதை பரமாச்சார்யாருடையது ;

      தமிழ் வரிகள் மட்டுந்தான் நான் எழுதியது .

      பின்ன்னோட்டத்திற்கு நன்றி ராஜராஜேஸ்வரி !

      Delete
  2. //வேழமுகப்பிள்ளையைப்போல் என்னையும் நீ பாரம்மா//


    என்னையும்!

    ReplyDelete
  3. We have visited Kamakshi Amman Temple many times but due to Paramacharya's Grace, information about the temple keeps on unfolding which makes us visit the temple again and again. Touching lyrics Lalitha. Keep it up.

    ReplyDelete