Showing posts with label navarathri. Show all posts
Showing posts with label navarathri. Show all posts

Sunday, October 10, 2010

"ஸ்ரீ லலிதா நவமணி மாலை"


"ஸ்ரீ லலிதா நவமணி மாலை"


காப்பு

எல்லாம் தருவான் எதையும் தருவான்
அல்லாதன வெல்லாம் அகற்றிட வருவான்
நல்லோர் புகழும் லலிதையின் தோத்திரம்
சொல்லா லிசைத்திட கணபதி காப்பான்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
********

நவமணி மாலை.

அன்பின் திருவாய் அகமெலாம் திறந்திட
ஆயிரங்கையுடன் நீயெதிர் வந்தாய்
துன்பம் நீங்கிடத் தயவுட னணைத்தே
தாயென நின்னிரு தாளெனக் கீந்தாய்
நின்பத மொன்றே கதியென வேண்டிடும்
அடியவர் நெஞ்சினில் அமைந்துநீ இருப்பாய்
மன்புகழ் வயிரப் படைவாள் கொண்டயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

கோலம் இட்டுனைக் கூடத்துள் அழைத்தேன்
கோணம் நடுவினில் நீவந் தமர்ந்தாய்
மாலைகள் சூட்டியே பாக்களும் படித்தேன்
மங்கலமாய் நின் திருமுகம் கண்டேன்
சோலைத் தருவே சுந்தர வடிவே
சோகம் அகற்றியென் வாழ்வினில் மலர்வாய்
நீலக் கடலனை நித்தில மேயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

தத்தும் மழலையின் தளிர்நடை கண்டே
தாயவள் மகிழும் பாங்கினை யொத்தாய்
கத்துங் கிளியின் கவினுறு வெழிலாய்
பாயும் ஒளியாய்ப் பரவசம் தந்தாய்
வித்தகியே நவ ராத்ரியின் நாயகி
தோயும் அன்பினைத் தினந்தினம் தருவாய்
முத்தே ரனையமென் முறுவலைப் பூக்குமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

முந்தையென் வினைகள் யாவும் நீங்கிட
எந்தாய் நினையே சரண மடைந்தேன்
சிந்தையில் நினைந்தே தினம்நான் துதித்தேன்
வாராதிரு ந்திட மனமோ அம்மா
தந்திடும் வரங்கள் சொல்லிடத் தகுமோ
தாயே எனக்குநின் பதமலர் தருவாய்
வந்தே நிரம்ப வளம்நீ தருவாயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

காணி நிலமும் கழஞ்சும் வேண்டேன்
கருதும் எதுவும் இனியான் வேண்டேன்
ஆணிப் பொன்னும் ஐஸ்வர்யம் வேண்டேன்
விரும்பும் எவையும் எனக்கென வேண்டேன்
நாணிக் கோணி நீநகர்ந்து செல்லாதுன்
தாளிணை சுகமே எனக்கினி வேண்டும்
மாணிக்கப் பரல் தண்டைகள் குலுங்குமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

வரமிதை அளிப்பாய் வாழ்வுடைத் தாயே
வந்தென் தாபத்தைத் தீர்த்தெனை யணைப்பாய்
பரகதி தந்தென் வாழ்வினை நிறைப்பாய்
பிறவியிலாதொரு நிலையினைத் தருவாய்
சுரமிசை பாடியென் உள்ளத்து ளழைத்தேன்
சுவைதரும் படையலும் உனக்கென வைத்தேன்
மரகதப் பதக்கம் மின்னிடும் தேவியென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

மாமேரு வினில்நடு நாயகி நீயே
துர்கா லக்ஷ்மி சரஸ்வதி நீயே
பாமேல் வந்திடும் பாலகி நீயே
பணிபவர் நெஞ்சினுள் உறைபவள் நீயே
பூமே லமர்ந்திடும் தாயவள் நீயே
புனித நவராத்ரி நாயகி நீயே
கோமே தகமே குணவதியே யென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

உதித்திடு முச்சித் திலகமும் நீயே
உண்மையின் வடிவமாம் உமையவள் நீயே
துதித்திடு மன்பரின் துணைநலன் நீயே
தொல்லைகள் நீக்கிடும் துர்க்கையும் நீயே
மதியொளி மகுடம் தாங்கிடும் தேவியே
கதியென வுன்னிரு பதமலர் அருளே
பதும ராகமணி மாலைகள் புனையுமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

தடுத்தெனை யாண்டிடத் தாயே வருவாய்
தயவுகள் புரிந்துன் சேயெனைக் காப்பாய்
அடுத்திடும் கவலைகள் அணுகிடா வண்ணம்
அன்புருவே யெனை அனுதினம் காப்பாய்
கொடுத்திடும் குருவாய்க் குழந்தையாய் வந்தென்
வினைத்துய ரகற்றியே முத்தியைத் தருவாய்
வைடூரிய நவ மாலை யணியுமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
********
நவநா யகியரின் தாயினைப் போற்றும்
நவமணிமாலையில் வாழ்ந்திடும் தேவி
நவநவ பாக்கியம் அனைத்தையும் தந்தே
நலமுடன் காப்பாள் தாயே சரணம்!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
******************************************

"அன்னையருள் அருகிருக்கும்!"
"அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!"

Saturday, September 26, 2009

"கண்ட களிப்பா"

"கண்ட களிப்பா"


கண்டவர் பின்னலையாமல் கண்ணெதிரே கண்டுகொண்டேன்
கொண்டவள் இவளென்றே குவலயத்தில் நான்கண்டேன்
வண்டார்குழலி வண்ணக் கண்ணுடையாள் என்னவளைச்
செண்டார் நாயகியை என்னுள்ளே நான் கண்டுகொண்டேன்!1

கண்டேன் கண்ணெதிரே கனகமணி மகுடம்கண்டேன்
கொண்டேன் இருகைசேர்த்தவளை என்னெஞ்சுள் கொண்டேன்
அண்டம் அனைத்துக்கும் ஆதியான அன்னையிவள் கருணையினால்
பண்டைவினையின் பயனெல்லாம் சிறந்திடவே கண்டேன்!2

கண்டமுகச் சிரிப்பினிலே மனம்நிறையக் கண்டேன்
கொண்டமலர்ச்சரவாசம் நெஞ்சினிக்கக் கொண்டேன்
கொண்டைநிறைக் கூந்தலுடைக் கார்மேகக் கண்மணியை
அண்டமெல்லாம் காப்பவளை என்னுள்ளே கண்டுகொண்டேன்!3

கண்டேன் திருமுகத்தின் ஒளிநிறைக்கக் கண்டேன்
கெண்டைமீனின் துள்ளலாடும் கருவிழிகள் கண்டேன்
தண்டையணி சதங்கைகொஞ்சும் பட்டுமலர்ப்பாதம்
கொண்டவளை நாடியென் நெஞ்சினுள்ளே கொண்டேன்!4

கண்டேன் கருத்தினிலே நிறைந்தவளைக் கண்டுகொண்டேன்
அண்டபகி ரண்டமெலாம் அவளடியில் பணியக் கண்டேன்
கண்டமதில் பொலிகின்ற பொற்றாலிமின்னக் கண்டேன்
கண்டவளை வணங்கியே நெஞ்சினிக்கக் கொண்டேன்!5

கண்டதிரு மேனியிலே காஞ்சிப்பட்டு மின்னக்கண்டேன்
கெண்டைக்கால்களிலே பொன்கொலுசு ஒளிரக் கண்டேன்
செண்டுமலர்த் தாங்கிவரும் கார்மேகக் கூந்தல் கண்டேன்
கண்டவளின் தாள்பணிந்து என்னுள்ளே கொண்டேன்!6

கண்டேன் பொன்னாரம் கழுத்தினிலே மின்னக்கண்டேன்
தண்டுவடப் பொன்னாரப் பதக்கம் மின்னக் கண்டேன்
மொண்டார் பொய்கையென அருள்சுரக்கும் விழிகண்டேன்
கண்டவளைக் கைதொழுது கண்ணாரக் கண்டுகொண்டேன்!7

கண்டவளின் கருணையிலே கண்ணீர் மல்கக் கண்டேன்
மண்டலங்கள் மயங்கவைக்கும் மகத்தான எழில் கண்டேன்
விண்டுரைக்க வொண்ணாத அருள்சுரக்கும் அழகு கண்டேன்
எண்டைவினைதீர்க்க வந்தவளை என்னுள்ளேநான் கொண்டேன்!8

கண்டவரும் விண்டிடாத கவினழகைக் கண்ணாரக் கண்டேன்
கண்டதிலே மகிழ்ந்திடவே கருத்தினிலே எந்நாளும் கொண்டேன்
கொண்டதெலாம் உணர்ந்திடவே மனம்கரையக் கண்டேன்
திண்டாடும் துயரெல்லாம் தீயினால் தூசாகக் கண்டேன்! 9

கண்டதிங்கே சொல்லிடவே குருவருளைத் தேடிக் கண்டேன்
கண்டதிலே ஒன்றியவர் கைபிடித்து நடத்தக் கண்டேன்
கொண்டதெலாம் சிறந்திடவே அமைதியகம் மிகக்கண்டேன்
கண்ட களிப்பாவிற்குக் காரணியாய்த் தாயைக் கொண்டேன்! [10]

****************************

Friday, September 25, 2009

"நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!"

"நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!"

அன்னையிவள் அருகில்வந்து ஆதரவாய்ப் பார்த்தாள்
என்னையிரு கைகளிலே மழலையெனச் சேர்த்தாள்
தன்னுடனே வைத்திருந்து தன்னுருவைக் காட்டி
முன்னையொரு வினைப்பயனாய் வந்தென்னில் கலந்தாள்

அழகென்னும் ஓர் தெய்வம் மேலிருந்து இறங்கி
அருகென்னில் வந்திருந்து அருட்கரத்தைக் காட்டி
திருவுருவச் சிறப்பெல்லாம் தனித்தனியே காட்டி
முறுவலுடன் மகிழ்த்தியதைநான் என்னவெனச் சொல்ல!

நவநவமாய்த் தினம் பிறந்து அல்லலுறும் என்னை
நவக்கோலம் காட்டியவள் நானுயரச் செய்தாள்
தவமிருந்தும் கிடைக்காத தாயவளின் கருணை
நவராத்ரியில் கிட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

குளிர்நிலவாய் வந்தென்றன் குறையெல்லாம் தீர்த்தாள்
பிறைநிலவாய்க் காட்சிதந்து பேரறிவில் நின்றாள்
வளர்நிலவாய் வந்தவளென் வாழ்வுயரச் செய்தாள்
முழுநிலவாய்ப் பொலிந்ததைநான் என்னவெனச் சொல்ல!

உலகோரை வாழவைக்க அன்னைகொண்ட தோற்றம்
உலகாளும் மாயவளின் ஒன்பதுவகைத் தோற்றம்
உலகெல்லாம் கொண்டாடும் நவதுர்கா தோற்றம்
எனக்காகத் தந்ததைநான் என்னவெனச் சொல்ல!

மலைமகளோ அலைமகளோ கலைமகளோ என்றே
மனதினிலே நானெண்ணி இருந்தநிலை எல்லாம்
ஒருநொடியில் தகர்த்தெறிந்து துர்கையுருக்காட்டி
ஆட்கொண்ட திறத்தினைநான் என்னவெனச் சொல்ல!

ஹிமவானின் மகளாக, தவமிருந்த கோலமாக
மணிநிலவின் ஒளியாக, அண்டம்காக்கும் அன்னையாக
கந்தனவன் தாயாக, குலமாதா காத்யாயனியாய்
ஆறுகோலம் காட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

காலத்தை நடுங்கச் செய்யும் காலதாத்ரி ரூபமாக
சீலத்தைக் காட்டிவரும் மஹாகௌரித் தாயாக
அட்டமஹாசித்திதரும் சித்தாத்ரி அன்னையாக
நவகோலம் காட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

எதிரில் வந்து நின்றவளின் எழிட்கோலம் கண்டேன்
கதிரொளியாய் வந்தென்னில் கலந்தவளைக் கொண்டேன்
இனியவளே கதியென்னும் இன்பநிலைக் கொண்டேன்
கனிவான அருள்முகத்தின் கருணையிலே கலந்தேன்!

அன்னையுன்றன் அருட்கோலம் நெஞ்சினிலே வைத்து
நீயின்றிக் கதியில்லை எனமிகவும் கதறி
அனுதினமும் நின்னளருளைத் தந்திடவே வேண்டுமெனும்
ஒருவரம்நீ அருளிடுவாய் உலகாளும் துர்க்கே!

நவதுர்கை அன்னையரின் தாளிணையைப் போற்றி
அவரருளே வேண்டுமென நாள்தோறும் வேண்டி

அடியார்கள் அனைவருக்கும் நல்லருள் நீ செய்திடவே

நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!

*****************
ஜெயதேவி துர்க்கே! ஜெயதேவி துர்க்கே! ஜெயதேவி துர்க்கே!

Wednesday, September 23, 2009

நவசக்தி நங்கையளே! நாதமுடி வானவளே!

நவசக்தி நங்கையளே! நாதமுடி வானவளே!


கலையாத கனவுகளின் நினைவான நிலவொளியே

அலையாடும் நெஞ்சிற்கு ஆறுதலாய் வருபவளே

மலையரசி பெற்றெடுத்த மாதவத்தின் பெரும்பயனே

குலையாத பேரெழிலின் அழியாத நித்தியமே

வலையாடும் வேல்விழியால் வண்ணத்தை இறைப்பவளே

நிலையாக என்நெஞ்சில் நின்றாடும் சுந்தரியே

சிலையாக நின்றென்னைச் சித்தம் குலையச் செய்பவளே

கலையாவும் பயிலவைக்கும் கருத்தான துர்க்கையளே ! 1


உனையெண்ணிப் பாடிவரும் அடியவரின் துயர் தீர்ப்பாய்

உனையன்றி வேறில்லை என்பவரை உயர்த்திடுவாய்

உன்னருளால் இயங்குகிறேன் உலகாளும் தூயவளே

உன்பெருமை பாடுகிறேன் உத்தமியே சுந்தரியே

உன்கண்ணின் ஒளியாலே என்வாழ்வு சிறக்குதம்மா

உன்கைகள் அணைப்பாலே என்மேனி சிலிர்க்குதம்மா

உன்னைப்போல் ஓர்தெய்வம் உலகினில்நான் கண்டதில்லை

உண்மையிது சொல்லிவைத்தேன் உண்மையே நீதானம்மா! 2


ஏனென்று கேளாமல் என்னுள்ளே நீ புகுந்தாய்

தானாக வந்தென்னில் தணியாத சுகம் தந்தாய்

ஊனாடும் உயிரெல்லாம் நிறைந்தங்கே ஒளிசெய்தாய்

மீனாடும் கண்ணாலே மனதினிலே நிறைந்துவிட்டாய்

தேனூறும் சொல்லாலே தித்திக்கும் தமிழ்தந்தாய்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியானாய்

நானாக நானில்லை என்னுமோர் நிலைதந்தாய்

பூணாரம் பூண்டவளே பொன்மகளே துர்க்கையம்மா! 3


மலையமான் மகளாகி மறையோனுக்காய்த் தவமிருந்தாய்

கலையாத பக்தியுடன் ஊசிமுனைத் தவமிருந்தாய்

தலையாடும் கிழவனாகச் சிவன்வரவே நீசிரித்தாய்

பிழையான மொழிபேசும் விருத்தனையே நீசினந்தாய்

பிறழாத பணிவுடனே பணிவிடைநீ செய்திருந்தாய்

அழகான தன் தோற்றம் சிவன்காட்ட நீமகிழ்ந்தாய்

மனங்கொண்ட மணவாளன் மனம்மகிழ மணமுடித்தாய்

எனையாளும் தாய்நீயே என்றென்றும் எனைக்காப்பாய்! 4


பாற்கடலில் நீயுதித்துப் பரந்தாமன் மனையானாய்

ஆர்ப்பரிக்கும் அலைகடலில் அழகே நீ நிதியானாய்

மாலவனின் மார்பினிலே குடியிருக்கும் மங்கையானாய்

சூலம் ஏந்தியேநீ மஹிஷசுர மர்த்தினியானாய்

விஷ்ணு மாயையாய்நீ மாலினைத் துயிலெழுப்பினாய்

மதுகைடப வதம்செய்த மனோஹரியும் நீயம்மா

வணங்கிவரும் அடியவரின் மனதுறையும் பொருள் நீயே

நனியனேன் என்னையும் காப்பதுவுன் கடனம்மா! 5


சொல்விளக்கும்பொருளானாய் சொல்விளக்கமே நீயானாய்

பல்லோரும் போற்றிடவே பார்புகழும் உருவானாய்

கல்லார்க்கும் கற்றார்க்கும் காட்டு மறைப்பொருளானாய்

எல்லாமும் நீயாகி மஹா ஸரஸ்வதியாய்த் திகழ்ந்தாய்

பல்வினைக்கும் சொந்தமானக் கொடியவரை வதம் செய்தாய்

வல்வினையால் வருந்துவோரின் துன்பமெல்லாம் நீ துடைத்தாய்

கல்விக்கே அதிபதியாய் கலைமகளெனும் பேர்பெற்றாய்

சொல்லாலே துதிக்கின்றேன் தூயவளே காத்திடம்மா! 6


ஏழுலகும் போற்றுகின்ற எங்கள்குல நாயகியே

ஏழ்கடலும் வற்றச்செய்யும் ஹூங்காரம் கொண்டவளே

ஏழுதலை நாகமுன்றன் முடிமேலே ஆடுதம்மா

ஏழுசுரம் பாடிவரும் இன்னிசையின் நாயகியே

ஏழ்முனிவர் கைதொழுதுன் அடிபோற்றி வந்தாரம்மா

ஏழேழு பிறவிக்கும் என்றன் துணையானவளே

ஏழ்நிலையில் வீற்றிருந்து யோகியர்க்கு அருள்பவளே

ஏழையெனைக் காத்திடவே எழுந்தோடி வாருமம்மா! 7


எட்டுத்திக்கும் புகழ்மணக்கும் ஏகாம்பரி நாரணியே

எட்டாக்கனியாக எங்கிருந்தோ அருள்பவளே

எட்டியுன்னைக் கண்டிடவோ எனக்குள்ளே தெரிபவளே

எட்டிரண்டு கைகள் கொண்ட எனையாளும் துர்க்கையளே

எட்டிவரும் துன்பங்கள் எனைவருத்தச் செய்யாதே

எட்டாத இன்பங்கள் எனக்கிங்கே இனிவேண்டாம்

எட்டியுன்றன் கால்பிடித்தேன் எனையேற்றுக் கொள்ளம்மா

தட்டாதிப் பாலகனைப் பரிந்தேற்றுக் கொள்ளம்மா! 8


நவமணியே! நவநிதியே! நல்லோரின் துணை நீயே!

நவாவரண நாயகியே! நினைத்தபோது வந்திடுவாய்!

நவயோக சுந்தரியே! நாடுமன்பர் நலம்சேர்ப்பாய்!

நவகோண நாயகியே! நாளுமின்பம் கூட்டிடுவாய்!

நவநவமாய்ப் பொலிபவளே! நெஞ்சினிலே நீயிருப்பாய்!

நவதுர்கை நாயகியே! நோய்பிறப்பு தீர்த்திடுவாய்!

நவசக்தி நங்கையளே! நாதமுடி வானவளே!

நவராத்ரியில் நினைப்பணிந்தேன்! நல்வரம்நீ தருவாயம்மா! 9

*************************************


Friday, September 18, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" - 1&2

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 1&2

நவராத்ரியில் பொதுவாக நாமனைவரும் துர்கா, லக்ஷ்மி ஸரஸ்வதி எனும் முப்பெரும் தேவியரை வணங்குதல் மரபு. இவர்கள் மூவரும் முறையே சிவன், திருமால், பிரம்மா எனும் முக்கடவுளரின் சக்தியாக விளங்குவர். அருள்மிகக் கொண்ட லோகமாதா, தன் கருணையினால் இந்த தேவியரின் உள்ளிருந்து இயக்க இன்னும் மூன்று சக்திகள் பிறந்தன. இவையே நவராத்ரி நாயகியர் எனத் துதிக்கப்படும் சக்தியின் ஒன்பது அம்சங்கள். ஸ்ரீ மஹா துர்க்கையின் ஒன்பது அம்சங்களான இந்த நவராத்ரி நாயகியரின் குணச்சிறப்புகளைப் போற்றித் துதிக்கும் விதமாக இந்த 'நவநாயகியர் நற்றமிழ்மாலை' என்னும் துதிப்பாடலை இங்கு அளிக்கிறேன். மங்களமான இந்த நவராத்திரி நன்நாளில் இதனைதினந்தோறும் படித்து அவளருள் பெற அனைவரையும் வேண்டுகிறேன்.

எதை எழுதுவது எனத் திகைத்திருந்த வேளையில் தனது இந்த அம்சங்களை எனக்குக் காட்டியருளிய என் தாயின் கருணையைப் போற்றி, அவள் திருக்கமலங்களில் இதனைச் சமர்ப்பிக்கின்றேன். இவற்றுள் ஒரு அம்சம் ஸ்கந்த மாதா என்பது என் மனதுக்கு இனிமையாயிருந்தது!
ஒருநாள்விட்டு ஒருநாளாய் இந்தப் பதிவுகள் வரும். அந்தந்த நாட்களுக்கு உரிய தேவியைத் துதித்து அருள்பெற அழைக்கிறேன்! முருகனருள் முன்னிற்க, யாவினும் நலம் சூழ்க!


"நவநாயகியர் நற்றமிழ்மாலை"

'காப்பு'
மங்களஞ்சேர் நவநாயகி மன்னுபுகழ் பாடிடவே
பொங்குதமிழ்ச்சொல்லெடுத்துப் புகழ்மாலை சூட்டிடவே
தங்குதடை ஏதுமின்றிப் புகழ்பரதம் எழுதிட்ட
ஐங்கரனே நின்னடியே காப்பு.

1. ஷைலபுத்ரி தேவி:

சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே
புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே
மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே
வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும் துர்க்கையளே!
ஹிமவான் மகளாய் மலையினில் பிறந்து ஷைலபுத்ரியென அருள்பவளே
சிவனை அடைந்திடக் கடுந்தவம்செய்து சிவமும் அசைந்திடச் செய்தவளே
மூலாதாரத்தில் உன்னிடும் பக்தரை மேலேகொண்டு செல்பவளே
நவநாயகியரில் முதல்நாளின்று மஹாஷைலபுத்ரி தாள் பணிந்தேன்! [1]

2. ப்ரஹ்மசாரிணி மாதா:பிரமனின்மகனாம் தக்ஷனின்மகளாய்ச் சிவனை மணம்செய்து கொண்டவளே
சிவனைமதியாச் சிறுமதியோனைச் சீற்றம்பொங்கிடப் பார்த்தவளே
சொல்மதிகேளா தக்ஷனைச் சபித்துத் தீயினில் மறைந்த தூயவளே
ஹிமவான் மகளாய் மலைமடி தவழ்ந்த பேரெழில்கொண்ட துர்க்கையளே!
பிரஹ்மசாரிணியாய்க் கடுந்தவம்புரிந்து சிவனை அசைத்திட்ட தாயவளே
ஸ்வாதிஷ்ட்டானத்தில் இருந்திடும் அடியவர் வேண்டியநல்கும் மாயவளே
தைரியம்,வீரம் அறிவினில்தெளிவு அனைத்துக்கும் நீயே காரணியே
நவநாயகியரில் இரண்டாம்நாளின்று ப்ரஹ்மச்சாரிணியின் தாள் பணிந்தேன்! [2]

********************
[நவநாயகியர் உலா தொடரும்]