காப்புஎல்லாம் தருவான் எதையும் தருவான்
அல்லாதன வெல்லாம் அகற்றிட வருவான்
நல்லோர் புகழும் லலிதையின் தோத்திரம்
சொல்லா லிசைத்திட கணபதி காப்பான்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
********
நவமணி மாலை.
அன்பின் திருவாய் அகமெலாம் திறந்திட
ஆயிரங்கையுடன் நீயெதிர் வந்தாய்
துன்பம் நீங்கிடத் தயவுட னணைத்தே
தாயென நின்னிரு தாளெனக் கீந்தாய்
நின்பத மொன்றே கதியென வேண்டிடும்
அடியவர் நெஞ்சினில் அமைந்துநீ இருப்பாய்
மன்புகழ் வயிரப் படைவாள் கொண்டயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
கோலம் இட்டுனைக் கூடத்துள் அழைத்தேன்
கோணம் நடுவினில் நீவந் தமர்ந்தாய்
மாலைகள் சூட்டியே பாக்களும் படித்தேன்
மங்கலமாய் நின் திருமுகம் கண்டேன்
சோலைத் தருவே சுந்தர வடிவே
சோகம் அகற்றியென் வாழ்வினில் மலர்வாய்
நீலக் கடலனை நித்தில மேயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
தத்தும் மழலையின் தளிர்நடை கண்டே
தாயவள் மகிழும் பாங்கினை யொத்தாய்
கத்துங் கிளியின் கவினுறு வெழிலாய்
பாயும் ஒளியாய்ப் பரவசம் தந்தாய்
வித்தகியே நவ ராத்ரியின் நாயகி
தோயும் அன்பினைத் தினந்தினம் தருவாய்
முத்தே ரனையமென் முறுவலைப் பூக்குமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
முந்தையென் வினைகள் யாவும் நீங்கிட
எந்தாய் நினையே சரண மடைந்தேன்
சிந்தையில் நினைந்தே தினம்நான் துதித்தேன்
வாராதிரு ந்திட மனமோ அம்மா
தந்திடும் வரங்கள் சொல்லிடத் தகுமோ
தாயே எனக்குநின் பதமலர் தருவாய்
வந்தே நிரம்ப வளம்நீ தருவாயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
காணி நிலமும் கழஞ்சும் வேண்டேன்
கருதும் எதுவும் இனியான் வேண்டேன்
ஆணிப் பொன்னும் ஐஸ்வர்யம் வேண்டேன்
விரும்பும் எவையும் எனக்கென வேண்டேன்
நாணிக் கோணி நீநகர்ந்து செல்லாதுன்
தாளிணை சுகமே எனக்கினி வேண்டும்
மாணிக்கப் பரல் தண்டைகள் குலுங்குமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
வரமிதை அளிப்பாய் வாழ்வுடைத் தாயே
வந்தென் தாபத்தைத் தீர்த்தெனை யணைப்பாய்
பரகதி தந்தென் வாழ்வினை நிறைப்பாய்
பிறவியிலாதொரு நிலையினைத் தருவாய்
சுரமிசை பாடியென் உள்ளத்து ளழைத்தேன்
சுவைதரும் படையலும் உனக்கென வைத்தேன்
மரகதப் பதக்கம் மின்னிடும் தேவியென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாமேரு வினில்நடு நாயகி நீயே
துர்கா லக்ஷ்மி சரஸ்வதி நீயே
பாமேல் வந்திடும் பாலகி நீயே
பணிபவர் நெஞ்சினுள் உறைபவள் நீயே
பூமே லமர்ந்திடும் தாயவள் நீயே
புனித நவராத்ரி நாயகி நீயே
கோமே தகமே குணவதியே யென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
உதித்திடு முச்சித் திலகமும் நீயே
உண்மையின் வடிவமாம் உமையவள் நீயே
துதித்திடு மன்பரின் துணைநலன் நீயே
தொல்லைகள் நீக்கிடும் துர்க்கையும் நீயே
மதியொளி மகுடம் தாங்கிடும் தேவியே
கதியென வுன்னிரு பதமலர் அருளே
பதும ராகமணி மாலைகள் புனையுமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
தடுத்தெனை யாண்டிடத் தாயே வருவாய்
தயவுகள் புரிந்துன் சேயெனைக் காப்பாய்
அடுத்திடும் கவலைகள் அணுகிடா வண்ணம்
அன்புருவே யெனை அனுதினம் காப்பாய்
கொடுத்திடும் குருவாய்க் குழந்தையாய் வந்தென்
வினைத்துய ரகற்றியே முத்தியைத் தருவாய்
வைடூரிய நவ மாலை யணியுமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
********
நவநா யகியரின் தாயினைப் போற்றும்
நவமணிமாலையில் வாழ்ந்திடும் தேவி
நவநவ பாக்கியம் அனைத்தையும் தந்தே
நலமுடன் காப்பாள் தாயே சரணம்!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
******************************************
"அன்னையருள் அருகிருக்கும்!"
"அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!"






