Friday, July 6, 2007

"மாரியம்மன் தாலாட்டு" 18 [451-480]


"மாரியம்மன் தாலாட்டு" 18 [451-480]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள் 451-480]



பத்திரி பட்டவிடம் பாவம் பறந்தோடுமம்மா

விபூதிபட்ட தக்ஷணமே வினைகள் பறந்தோடுமம்மா

பஞ்சா க்ஷரம்பட்டால் பாவங்கள் தீர்ந்துவிடும்

பத்தென்றா லிரண்டறியேன் பாலனம்மா வுன்னடிமை

எட்டென்றா லிரண்டறியேன் ஏழையம்மா வுன்னடிமை

நாகத்தின் கண்ணேயம்மா நல்லவிடப் பாம்பே

சேஷத்தின் கண்ணேயம்மா சின்னவிடப் பாம்பே

பாம்பே தலைக்கணைதான் வேப்பிலையோ பஞ்சுமெத்தை

வேப்பம்பாலுண்டவளே வேதாந்த மாரிமுத்தே

ஐந்நூறு பாம்புனக்கு அள்ளியிட்ட வீரசடை [460]



வீரசடை மேலிருந்து விமலியரே கொஞ்சுமம்மா


முந்நூறு சந்தி முதற் சந்தி யுன்னுதென்றாய்


நானூறு சந்தி நடுச்சந்தி யுன்னுதென்றாய்


சந்திக்குச் சந்தி தனிச்சந்தி யுன்னுதென்றாய்


வீதிக்கு வீதி வெளிச்சந்தி யுன்னுதென்றாய்

பட்டத் தழகியம்மா படைமுகத்து ராஜகன்னி


கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே


திருவிளக்கு நாயகியே தேவிகன்ன னூராளே


மணிவிளக்கின் மேலிருந்து மாதாவே கொஞ்சுமம்மா


விளக்கிற் குடியிருந்து மெல்லியரே கொஞ்சுமம்மா [470]



திருவிளக்கின் மேலிருந்து தேவியரே கொஞ்சுமம்மா


கொஞ்சுமம்மா பெற்றவளே கோபாலன் தங்கையரே

சிரித்தார் முகத்தையம்மா செல்லரிக்கக் கண்டிடுவாய்


பரிகாசஞ் செய்பவரைப் பல்லைப் பிடுங்கி வைப்பாய்


மூலைவீட்டுப் பெண்களைத்தான் முற்றத்தி லாட்டிடுவாய்


அரண்மனைப் பெண்களைத்தா னம்பலத்தி லாட்டிடுவாய்


பொல்லாத பெண்களைத்தான் தோற்பாதங் கட்டிடுவாய்


தோற்பாதங் கட்டிடுவாய் துரந்தரியே மாதாவே


நடுவீதியிற் கொள்ளிவைத்து நானறியேன் என்றிடுவாய்


கடைவீதியிற் கொள்ளிவைத்துக் கடக்கப் போய் நின்றிடுவாய். [480]


[நில்லாமல் அவள் வருவாள்]

No comments:

Post a Comment