Wednesday, July 11, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 23 [611-640]

"மாரியம்மன் தாலாட்டு" -- 23 [611-640]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள்[611-640]

[அம்மன் ஒவ்வொரு மண்டபமாய் எழுந்தருளி வருகிறாள்! அவளுடைய வரவுக்காக யாரெல்லாம் வந்து முன்னதாக இருக்கைகளில் அமர்ந்து, காத்திருக்கிறார்க்ள் பாருங்கள்!]


ஐங்கரனும் வல்லபையும் அன்பாய்க் கொலுவிருந்தார்

தொந்தி வயிற்றோனும் துந்துபியுங் கொலுவிருந்தார்

குழந்தை வடிவேலன் குமரேசர் தானிருந்தார்

தோகை மயிலேறும் சுப்பிரமணியர் கொலுவிருந்தார்

சிங்கவா கனமேறும் தேவி கொலுவிருந்தார்

ஊர்காக்கும் காளி உத்தமியாள் கொலுவிருந்தாள்

துர்க்கையொடு காளி தொடர்ந்து கொலுவிருந்தாள்

வள்ளிதெய் வானையுடன் மகிழ்ந்து கொலுவிருந்தாள்

பச்சைமலை நாயகியாள் பைங்கிளியாள் தானிருந்தாள்

பூவைக் குறத்தியரும் பொருந்திக் கொலுவிருந்தாள் [620]


வாழ்முனியும் செம்முனியும் வந்து கொலுவிருந்தார்

காத்தன் கருப்பனொடு கட்டழகர் வீற்றிருந்தார்

தொட்டியத்துச் சின்னானும் துரைமகனுந் தானிருந்தார்

மருமக்க ளெல்லோரும் கூடிக் கொலுவிருந்தார்

குமாரர்க ளெல்லோரும் மகிழ்ந்து கொலுவிருந்தார்

ஆரிய மாலையுட னனைவோரும் வீற்றிருந்தார்

ஆயன் பெருமா ளனந்த சயனென்னும்

மாயன் பெருமாள் மங்கை மணவாளன்

ஐவரைக் காத்த ஆதி நெடுமாலும்

பஞ்சவரைக் காத்த பாரளந்தோர் தாமிருந்தோர் [630]


கொற்றவரைக் காத்த கோபாலர் தாமிருந்தார்

முட்டையிற் குஞ்சு முகமறியா பாலகரை

பிட்டு வளர்த்தெடுத்த பெருமாள் கொலுவிருந்தார்

செட்டையிற் காத்த செயராமர் சீதையரும்

அலமேலு மங்கையம்மா ளரிராமர் சீதையரும்

மங்கையோடு லட்சுமியும் மகிழ்ந்து கொலுவிருந்தார்

சீதேவி மூதேவி சேர்ந்துக் கொலுவிருந்தார்

பாஞ்சால னெக்கியத்தில் பதுமைபோல் வந்துதித்த

பத்தினியாள் துரோபதையும் பாரக் கொலுவிருந்தார்

தளரா தனஞ்செயரும் தருமர் கொலுவிருந்தார் [640]



[இன்னும் கொலுவில் வந்து காத்திருப்போர் நாளை வருவர்!]

2 comments:

  1. ///பத்தினியாள் துரோபதையும் பாரக் கொலுவிருந்தார்
    தளரா தனஞ்செயரும் தருமர் கொலுவிருந்தார் ///

    arumai!
    yaaraalum uukikkamudiyaathu!

    ReplyDelete
  2. தவறாமல் வந்து ஊக்கமளிப்பவர் தாங்களல்லவோ, ஆசானே!

    நன்றி! நன்றி!!

    ReplyDelete